10.3.09

பெங்களூர் - ஓசூர் ரோடு - பறக்கும் ஹைவே

பெங்களூரில் இருந்து ஓசூர் போகும் வழியில் பாதி தூரத்தில் உள்ளது, எலக்ட்ரானிக் சிட்டி. எஸ்.எம்.கிருஷ்ணா ஆட்சிக்காலத்தில் எலக்ட்ரானிக், ஐ.டி. கம்பெனிகளுக்கு சலுகை கொடுத்து ஆரம்பிக்கப்பட்ட இடம் இது. இதில் கம்பெனிகள் அதிகம் ஆக ஆக, இந்த சாலையில் பயணப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமானது. இந்த சாலைதான் தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் இருந்து பெங்களூர் வரும் வாகனங்களுக்கும் நுழைவு வாயில். இது போதாதா, வாகன நெரிசலுக்கு? அடிக்கடி இந்த ரோட்டுல போயிட்டு வந்தா காசநோய், தோல் வியாதி, பிரஷர் எல்லாம் வரும். அப்புறம் கொஞ்சம் நாள் கழிச்சி பொறுமை குணமும் கூடிடும்.



இதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் ஓசூர் ரோடு எலிவேட்டட் ஹைவே பிராஜக்ட். ரோட்ட நல்லா விரிவாக்கி, ஒரு பாலத்தை கட்டுறதுதான் பிளான். பாலம் ஒரு கிலோமீட்டர், ரெண்டு கிலோமீட்டர் இல்ல, கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டருக்கு ஒரே பாலம். மத்திய அரசின் நெடுஞ்சாலை துறை, கர்நாடக அரசு மற்றும் எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள நிறுவனங்களின் கூட்டமைப்பு போன்றவற்றின் கூட்டணியில் உருவாக்கப்படும் திட்டம் இது. ஆரம்பிச்சு வைச்சது மன்மோகன் சிங். 450 கோடி ரூபாய் செலவு. கட்டுனதுக்கப்புறம் வண்டியில போறவன்கிட்ட புடுங்கிடுவாங்க.



இந்த பாலம் கட்டுற விதம், எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. மண்ணு, சல்லி, கம்பி, சிமெண்ட் எதுவும் ரோட்டுல கிடக்குறது இல்ல. எல்லாத்தையும் தனிதனியா வெவ்வேறு இடங்களில் செஞ்சு, இங்க வந்து பிக்ஸ் பண்ணிடுறாங்க. முதல்ல தூணை வைக்குறாங்க. அப்புறம் துண்டு துண்டா ஒட்டி பாலத்தை உருவாக்கிடுறாங்க.



ரெண்டு தூணுக்கிடையில் இவ்வளோ தூரத்தில எப்படி இத்தனை பாகங்களை சேர்த்து ஒண்ணா வைக்குறாங்க? அதுவும் எப்படி இப்படி நிக்குது?ன்னு எனக்கு ஆரம்பத்துல ஏகப்பட்ட சந்தேகம்.



மேட்டர் ஒண்ணுமில்லை. ஊசி நூலுல பாசி மணி கோர்க்குற மாதிரி, பாலம் கட்டுற டெக்னாலஜி இது.கண்ணுக்கே தெரியாத கம்பிதான் மெயினு.




இப்ப, ரோட்ட ஒரளவுக்கு பெரிசாக்குனதுக்கே கொஞ்சம் டிராபிக் குறைஞ்ச மாதிரி தான் இருக்கு. நாலு இடங்களில் சாலையை கடக்க, சப்வேயும் கட்டி இருக்காங்க. மத்தியான வெயில் நேரத்தில பாலத்துக்கு கீழேயே போனா, பத்து கிலோமீட்டருக்கு வெயில இருந்து தப்பிச்சிடலாம். மழை பெயும்போதும் அப்படியே. ஆனா, நான் மாட்டேன்ப்பா.



கீழே ரோட்டுல ஆறு லேன். மேலே பாலத்துல நாலு லேன். இது தவிர, ரெண்டு பக்கமும் சர்வீஸ் ரோடு. முக்கால் மணி நேர பயணத்தை, பத்து நிமிசமா இது குறைச்சிடுமாம். இந்த வகையில ரோடு பிளஸ் பாலம் கட்டுறது இதுதான் இந்தியாவில் முதல்முறைன்னு சொல்லிக்கிட்டாங்க.




ஆரம்பத்தில் ரெண்டு வருஷத்தில் முடிப்பதாக பிளான். நீண்டுக்கொண்டே செல்கிறது. இந்த வருடம் முடிந்துவிடும் என்றே தோன்றுகிறது.




இந்த பாதை முழுமையான செயல்பாட்டுக்கு வந்தபின், வாகன நெரிசல் இருக்காதுன்னு நினைச்சிட்டு இருக்காங்க. பார்ப்போம் என்ன நடக்குதுன்னு? பாலத்துக்கு மேல சிக்னல் வச்ச ஊருதானே இது?

நன்றி .சரவண குமரன்-குமரன் குடில்