4.4.17

ஷோபா என்னும் அழியாத கோலம்














னவு காணும்
வேலைக்காரியாய்த்தான்
முதலில் ஷோபாவைப்
பார்த்தேன். தெருவில், கோவிலில்,
கடைவீதியில் பார்க்கும் ஒரு
சாதாரணப்பெண் போல இருக்கிறார்
ஷோபா என ஆனந்தவிகடன் சொன்னது மிகச் சரியானதுதான். அறிமுகம் செய்த கே.பாலச்சந்தருக்கு
இந்த இடத்தில் நன்றி சொல்லிக்கொள்ள வேண்டும். அங்குமிங்கும் பார்த்து, சரத்பாபுவின் செண்ட்டைத் திருட்டுத்தனமாய் போட்டுக்கொண்டு கண்ணாடியில் தன்னுடலைப் பார்க்கும் அந்த நேரத்தில் மிக நெருக்கத்தில் உணர்ந்தேன். எந்தப் பின்னணியிசையுமின்றி,  சரத்பாபுவிடம் அந்த உடலைப் பகிர்ந்து கொண்ட போது எதையோ இழந்துபோனவனாய் பார்க்கமுடியாமல் பார்த்து உட்கார்ந்திருந்தேன். அனுமந்துவின் வலி என்னிடம் இருந்தது. நிழல் நிஜமாக தெளிந்த பிறகு ஷோபாவின் முகத்தில் இருக்கும் நிதானத்தையும், பக்குவத்தையும் காணும் கமல்ஹாசனிடம் இருக்கும் பிரமிப்பு என்னிடம் இருந்தது. கடைசியில் சரத்பாபுவை மறுக்கிறபோது ஷோபாவைத் தூக்கிக் கொண்டாடி இருக்கிறேன். அன்று ஷோபா ஒரு நல்ல நடிகையாக மட்டுமேத் தெரிந்தார்.


வானவில் பின்புறம் மலர்ந்திருக்க ‘அடி பெண்ணே...” என மலையடிவாரத்தில்  ஒடிவருகிற போதுதான் என் பதின்மப் பருவத்தின் சிலிர்ப்போடு ஷோபாவை நேசிக்க ஆரம்பித்தேன். அந்தப் பெரிய குங்குமப் பொட்டும், மூக்குத்தியும் எவ்வளவு அழகானவையாக இருந்தன.  செந்தாழம் பூவென்று அப்போது சரத்பாபு காதலித்துக்கொண்டு இருந்தார்.
 
 
பிறகு குடையோடு வந்தது இந்து டீச்சர். வெளி யாவையும் நிழல் போலாக்கி மயங்கி நிற்கும் அந்த மாலைச்சூரியனிலிருந்து உணர்வுகள் சுதிகொள்ள ஆரம்பிக்கும். பஞ்சுக்கதிர்களாய் காற்றில் உற்சாகமாய் பொங்கிக்கொண்டு இருக்கும் புற்கூட்டத்திலிருந்து சலீல் சௌத்தரியின் இசை எழும்பும் அந்த தருணத்தில் சட்டென பரவசமாகிறது உள் பூராவும். வாய்க்கால்களும், வரப்புகளும், மரத்தடிகளுமாய் கிராமத்தின் அழகெல்லாம் காட்சிப்பறவைகளாய் இசையில் சிறகு விரிக்கும். “பூவண்ணம்.... போல நெஞ்சம்.... பூபாளம் பாடும் நேரம்...” என்னும் வரிகளில் உடல், உள்ளம் எல்லாம் லேசாகி விட, வாழ்க்கை எவ்வளவு சுகமானதாகவும், ரம்மியாகவும் ஆகிப்போகிறது. அதோ, ஆர்கண்டிச் சேலையில் தேவதையாய் ஷோபா ஒற்றை வரப்பில் நடந்துவர, திரவம் போல கசிந்துருகிப் போகிறேன். இசை, பாடல், குரல், காட்சி, உருவங்கள் என அனைத்தும் ஒன்றிப்போய் மிதக்கும் அந்தக் காலப்பரப்பில் போதைகொண்டு இன்னும் என் இளமை வாடாமல் கிடக்கிறேன்.
 
 
தொடர்ந்து ஏணிப்படிகள், ஒரு வீடு ஒரு உலகம், பசி என்று வேறு வேறு பிம்பங்களில் வந்தாலும் எனக்குள் எல்லாம் அழியாத கோலமாகவே மீட்டிக்கொண்டு இருந்தது. law of diminishing utility பற்றி உதாரணங்களுடன் புரொபசர் பொன்ராஜ் வகுப்பறையில் விளக்கிக்கொண்டு இருக்கும் போது ஷோபாவின் கண்ணை வரைந்து கொண்டு இருப்பேன். பாடப்புத்தகங்கள், நோட்டுக்கள் முழுக்க ஷோபாவின் முகங்களே முளைத்திருந்தன.  சிரிக்கும்போது குழந்தையும், மௌனமாய் இருக்கும்போது முதிர்ச்சியும், எப்போதும் ஓடிக்கொண்டு இருக்கும் புத்திசாலித்தனமும், குறுகுறுப்பும்தான் ஷோபா. வேகம் கூடிய நடையும் தெறிப்புகளாய் வந்து மறையும் சிறுவெட்கமும் அழகு. அந்த உருவம், அசைவுகள்,  உரையாடும் பாவம் எல்லாம் என் பிரியத்திற்குரியச் சாயல்களாயிருந்தன. என் தேவதைக்குரியவையாக இருந்தன. புல்வெளிகளில், கடற்கரையில் நான் ஷோபாவுடன் நடந்து கொண்டு இருந்தேன். நான் எதோ சொல்ல ஷோபா வெட்கப்பட்டுச் சிரிப்பதை உணர்ந்தேன். என் இனிய பொன் நிலாவாக வான்வெளியில் வைத்துப் பார்த்துக்கொண்டு இருந்தேன். விளக்குகள் அணைக்கப்பட்ட இருளில் இருந்து ஷோபா வெளியேறி நாளாகியிருந்தது.
 
 
அது எப்படி என்று தெரியவில்லை. அது ஏன் என்றும் தெரியவில்லை. இனக்கவர்ச்சி என்பதெல்லாம் தாண்டிய உறவாக அதை வரித்துக்கொண்டேன். வெதுவெதுவென எப்போதும் ததும்பிக்கொண்டு இருக்கிற நினைவுகள் என்னை மிருதுவாக வருடிக்கொண்டிருந்தன. தொலை தூரத்து நட்சத்திரமே என்பதை புரிந்து கொண்டாலும், அது என் பாதையில் மட்டும் சிந்திய ஒளியை எல்லாம் பத்திரமாக்கி வைத்துக்கொண்டிருந்தேன்.
 
 
ஒருநாள் வானொலியில் ஷோபா தற்கொலை செய்து கொண்டதாக ஒரு பெண் சொன்னாள். பத்திரிகையில் படங்களுடன் செய்திகள் வந்தன. அன்று நான் சாப்பிடவில்லை. பைத்தியம் போலக் கிடந்தேன். மரணம் குறித்து வந்த செய்திகளும், சர்ச்சைகளும் எனக்கு முக்கியமானதாய் படவில்லை. அருமையான ஒன்றை இழந்த சோகம் மட்டுமே என் நாட்களில் அப்பிக்கொண்டிருந்தது. இனி இந்த உலகில் எந்தப் பெண்ணும் அழகானவளாய், ரசனைக்குரியவளாய் இருக்க மாட்டாள் என்றெல்லாம் தோன்றியது. ச்சீப் பைத்தியம் என்று என்னையே நான் கோபப்பட்டாலும், அதுதான் உண்மையென்று அழுத்தமாக உறைத்துக் கொண்டிருந்தது.
 
 
ஆனால் ஷோபா எங்கும் போய்விடவில்லை. திரும்பவும் உயிரோடு எழுந்து வந்திருக்கும் செய்தியை ரகசியமாக வைத்துக் கொண்டேன். நான் வரைந்த ஷோபாக்கள் என்னைச் சுற்றி நடமாடிக் கொண்டு இருப்பதைப் பார்த்தேன். கால அமைதி கொண்டு நிற்கிற ஷோபா இப்போது.
 
 
ஆமாம், கு.ப.ராஜகோபாலனுக்கு ஷோபா எப்படித் தெரியும்? கள்ளங்கபடமற்ற நூருன்னிஷாவாக வடிவம் பெற்று எழுந்து நின்றது ஷோபாவேதான். அப்புறம் பார்த்தால் ஸ்டெப்பி புல்வெளிகளில் பாடித்திரிந்து கொண்டிருந்த என்னருமை ஜமிலாவும், “இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாபு” என்று தலையைக் கோதிவிட்ட யமுனாவும் ஷோபாதான். பிலிம் சுருள்களுக்குள்ளிருந்து விடுபட்டு, நான் நேசிக்கிற பெண்களுக்குள் எதோ ஒரு வார்த்தையின், அசைவின் வழியாக ஷோபா கூடு பாய்ந்து விடுவதை அறிந்து கொண்டேன். 
 
 
அந்த இடத்தை நிரப்ப முடியாத பெண் ஷோபா. ‘மேகமே... மேகமே’ என்று சுஹாசினி புல்வெளியில் உட்கார்ந்திருக்கிற நாட்கள் சில வந்தன. “பூவே பூச்சுடவா” என நதியா துள்ளித் திரிந்த நாட்கள் சில வந்தன. அவர்கள் போன சுவடு தெரியவில்லை. நான் தேடவுமில்லை. ஷோபா மட்டும் திரும்ப திரும்ப வந்து கொண்டே இருக்க முடிகிறது. நேற்று கூட ஷாஜஹானின் எழுத்தில் அண்ணியாக வந்து “நாளை இந்த நேரம் பார்த்து” என்று பாடிக்கொண்டு இருந்ததைக் கேட்டேனே.
 
 
காலம் எவ்வளவோ கடந்து போனாலும், எந்த அற்புதத்தையும், அழகையும் நாம் இழந்து போவதில்லை. ரசனைகளின் சித்திரங்கள் வயதுகள் தாண்டியும் கூடவே வருகின்றன. எப்போது பார்த்தாலும் வான்வெளியில் சட்டென்று  கண்ணில் படுவதாய் எல்லோரும் தங்களுக்கென்று ஒரு நட்சத்திரம் வைத்திருக்கிறார்கள். அறிவு பூர்வமான புரிதல்களுக்குள்ளும், பக்குவங்களுக்குள்ளும் அடைபடாத அழியாத கோலங்கள் இவை.
 
 
இரண்டு வருடங்களுக்கு முன்பு பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி பிரச்சினைகள் குறித்து நாங்கள் எடுத்திருந்த ‘இது வேறு இதிகாசம்’ ஆவணப்படத்தை வெளியிட மதுரைக்கு பாலுமகேந்திரா வந்திருந்தார். விமான நிலையத்தில் வரவேற்றதிலிருந்து கிட்டத்தட்ட ஒருநாள் முழுக்க அவரோடு ஒரு ஓட்டல் அறையில் கூடவே இருந்தேன். நிறைய விஷயங்கள் பேசிக்கொண்டு இருந்தார். எழுத்தாளர்கள் தமிழ்ச்சினிமாவிற்குள் வரவேண்டியதன் அவசியம் பற்றிச் சொல்லிக்கொண்டு இருக்கும்போது, “நீங்களும் நன்றாக எழுதுவீர்களே” என்றேன். “நான் எழுத்துக்களை வாசிப்பேன். எங்கே எழுதினேன்?” என்றார். கொஞ்சமும் யோசிக்காமல் “ஷோபா அவர்கள் இறந்தபோது குமுதத்தில் அந்த நினைவுகளை ஒரு தொடராக எழுதினீர்களே... நான் அதை விடாமல் படித்திருக்கிறேன். ரொம்ப நல்லாயிருந்தது” என்றேன். பதில் எதுவும் சொல்லாமல் அமைதியானார். தர்மசங்கடமாயிருந்தாலும், நானும் அமைதியாயிருந்தேன். நீண்ட அந்த மௌனத்தில் இருந்து எழுந்து வந்து கொண்டிருந்தார் ஷோபா! 
 
 
பி.கு:
 

லிப்டில் ஏறி, ஆபிஸ் அறைக்குள் புகுந்து கொண்ட அந்த இளைய கமல், அன்று வந்த கடிதங்களை பார்வையிடுவார். எங்கோ இருக்கும் அவரது கிராமத்திலிருந்து பால்ய கால சினேகிதனின் கடிதம் வந்திருக்கும். ஆபிஸ் பியூனை அழைத்து  “யாரையும் கொஞ்ச நேரம் உள்ளே விடவேண்டாம்” என்று சொல்லிவிட்டு, கடிதத்தை படிக்க  ஆரம்பிப்பார். “நம்ம இந்து டீச்சர் இல்ல, இந்து டீச்சர் அவங்க இறந்துட்டாங்க..” என்ற வரிகளோடு கடிதமும், ‘அழியாத கோலங்களும்’ ஆரம்பிக்கும். நானும் என் கதவுகளை கொஞ்ச நேரம் பூட்டிக்கொண்டிருக்கிறேன்.

நன்றி - கட்டுரை  எழுதியவர் மாதவராஜ்

http://www.mathavaraj.com/2009/08/300.html





பாலுமகேந்திரா எதற்காக அப்படி ஓடினார்?











பாலுமகேந்திராவைப் பற்றி எப்போது நினைத்தாலும் பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவின்போது ஒவ்வொரு படம் முடிந்ததும் தியேட்டரை விட்டு முதல் ஆளாக வெளிவந்து எங்கேயோ வெகு அவசரமாக ஓடுவார். அந்தக் காட்சிதான் ஞாபகத்தில் இருக்கிறது. அது சாதாரண அவசரமாக இருக்காது. அடித்துப் பிடித்து ஓடுவதுபோல் இருக்கும். எங்கே ஓடுகிறார் என்பது தெரியாது. ஆனால் ஓடுவார்.

கொஞ்சம் தாட்டியான உடம்பு. தலையில் தொப்பி. (ஆமாம் அந்தக் காலத்திலேயே தொப்பிதான்) தோளில் ஒரு நீண்ட ஜோல்னாப்பை சகிதம் தியேட்டரை விட்டு வெளியில் போய்விடுவார். எங்கே போகிறார் என்பது தெரியாது.

அது சர்வதேச திரைப்பட விழா என்பதால் திரையுலகின் சாதனையாளர்கள் ஏகமாய் குவிந்து இரைந்து கிடப்பார்கள். படங்களைப் பற்றிய விமரிசனங்கள், புதியவர்களின் அறிமுகங்கள் என்று ஒருவரையொருவர் சந்தித்துப் பேசுகின்ற வாய்ப்பு அங்கே கிடைக்கும்.பாலுமகேந்திரா அங்கெல்லாம் நின்று பேசிக்கொண்டிருந்ததாக ஞாபகமில்லை. சில முக்கியமான படங்களின் இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் சந்திப்பு நட்சத்திர ஓட்டலான அசோகாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். சில வேளைகளில் அந்தச் சந்திப்புகளில் பாலுமகேந்திராவின் முகம் தெரியும். சிறிது நேரம்தான்……பிறகு பார்க்கலாம் என்று பார்த்தால் ஆள் இருக்கமாட்டார்.


அவரிடம் எனக்கு நல்ல பழக்கமெல்லாம் இல்லை. ஆனால் ஒரு  ஏழெட்டு தடவைகள் சந்தித்திருக்கிறேன் என்ற அளவுக்குத்தான் தெரியும். ஃபிலிம் ஃபெஸ்டிவலில் மலையாளப் படங்களின் ஒளிப்பதிவாளர், குறிப்பாக நெல்லு படத்தின் ஒளிப்பதிவாளர்  என்ற முத்திரை அவருக்கு இருந்தது. புகழ்பெற்ற சங்கராபரணமெல்லாம் பின்னால் வந்த படங்கள்…….


ஒரு படம் முடிந்து   அடுத்த படம் துவங்குவதற்கு இருந்த இடைவேளையில் நான், பத்திரிகையாளரும் கவிஞருமான எம்.ஜி.வல்லபன் மற்றும் சிலர் நின்று பேசிக்கொண்டிருந்தபோது அதே அவசரத்துடன் மாடியிலிருந்து இறங்கி வந்தார் பாலுமகேந்திரா. “சார் வாங்க.. என்ன கிடைக்கவே மாட்டேன்றீங்க. அவசரமா எங்கேயோ ஓடிர்றீங்க. ஒரு காபி சாப்பிடலாம் இருங்க” என்று வல்லபன் சொன்னபோது “பேசிட்டிருங்க வல்லபன். கொஞ்சம் வேலையிருக்கு. இதோ வந்திர்றேன்” என்று சொல்லிக்கொண்டு போய்க்கொண்டே இருந்தார் அவர்.

அவர் போனதும், “சார் நாளைக்கி நமக்கு இதான் சார் வேலை. அவரு எங்கே இப்படி ஓடுறார்னு கண்டுபிடிக்கணும்” என்று சொல்லிவிட்டார் வல்லபன்.
அதேபோல மறுநாள் முதல்காட்சி முடிந்து அவசர அவசரமாக பாலுமகேந்திரா கிளம்பியதும் நான், வல்லபன், மற்றும் இன்னொரு பத்திரிகை நண்பர் மூன்றுபேரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றோம்.
வேகமாகச் சென்ற அவர் மெஜஸ்டிக்கின் பிரதான சாலையைக் கடந்து அந்தப் பக்கம் போனார். குப்தா மார்க்கெட் என்ற பகுதி அது. அந்தக் காம்பவுண்டிற்குள் நுழைந்த அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த போஸ்ட் பாக்சின் அருகில் சென்று நின்றார்.
தமது ஜோல்னாப் பையைத் திறந்து கத்தையாக இன்லண்ட் லெட்டர்களை எடுத்து அதிலிருந்து ஒன்றை உருவிக்கொண்டார்.
ஒரு நோட்டுப் புத்தகத்தை அடியில் கொடுத்து அந்தப் பெட்டியின் மீது வைத்து மளமளவென்று எழுத ஆரம்பித்தார்.
நாங்கள் மூன்று பேரும் எதிர்புறத்தில் இருந்த கடையின் நிழலில் நின்று பார்த்துக்கொண்டே இருந்தோம். வேகமாக எழுதியவர் கடிதத்தை முடித்து நாக்கில் ஈரப்படுத்தி அதை ஒட்டி அந்தத் தபால் பெட்டியில் போட்டுவிட்டு நிமிர்ந்தார்.


இப்போது அவர் முகம் ஆசுவாசப்பட்டதுபோல், தமது கடமையை முடித்துவிட்ட திருப்தியில் இருந்ததுபோல் இருந்தது. பிறகு சாவதானமாக ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு மதிய உணவுக்காக பக்கத்திலிருந்த ஓட்டலை நோக்கி நடக்கத் தொடங்கினார் அவர்.
‘பிலிம்பெஸ்டிவல் பற்றிக் கவர் பண்றதுக்காக ஏதாவது ஒரு ஆங்கிலப் பத்திரிகையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கலாம். அதான் ஒவ்வொரு படம் முடிந்தவுடனும் அது பற்றிய விவரங்களை உடனுக்குடன் எழுதி அனுப்பிடறார். நாம எல்லாம் குறிப்பு எடுத்து வச்சுக்கிட்டு ஓட்டல்ல போய் உட்கார்ந்து எழுதுவோம். அவர் பாருங்க உடனடியா எழுதி அனுப்பிடறார்’ என்று காரணம் சொன்னார் வல்லபன். அப்படித்தான் இருக்கும்போலும் என்று நினைத்துக்கொண்டு பேசாமல் இருந்துவிட்டோம்.


அதன்பிறகு படம் முடிந்ததும் அவர் அவசரமாக ஓடியபோதெல்லாம் கடிதமெழுதத்தான் ஓடுகிறார் என்பது புரிந்தது. அவரும் குப்தா மார்க்கெட் காம்பவுண்டுக்குள்தான் போவார். அங்கே கடிதமெழுதி போஸ்ட் செய்துவிட்டுத்தான் வருவார். இது கடைசிவரைத் தொடர்ந்தபடியே இருந்தது.
இதன்பிறகு அவரை நேரில் சந்தித்தது கோகிலா கன்னடப் படத்தின் படப்பிடிப்பின்போது. கமல் கூட்டிச்சென்று அறிமுகப்படுத்தியபோது “உங்களை இதுக்கு முன்னாலேயே பார்த்திருக்கேனே” என்றார். “பிலிம் பெஸ்டிவல் நேரத்தில் வல்லபனுடன் பார்த்திருப்பீங்க. ஒவ்வொரு படம் முடிஞ்சதும் வேகமாகப் போய் ஒரு கடிதம் எழுதிப்போடுவீங்க. அதை கவனிச்சிருக்கேன்” என்றேன்.


அவர் முகத்தில் சட்டென்று ஆச்சரியம் தாக்கியதுபோல் என்னை ஒரு கணம் பார்த்தவர் “ஓ. அதை கவனிச்சிருக்கீங்களா நீங்க?” என்றார்.
“என்ன பிலிம்பெஸ்டிவல், என்ன கடிதம்?” என்றார் கமல்.
“அதை அப்புறமா சொல்றேன்” என்று கமலுக்கு பதிலளித்தார் பாலுமகேந்திரா.
“இவர் சுஜாதாவுக்கும் நல்ல நண்பர். சுஜாதாவை இங்கே அழைச்சுவரச் சொல்லியிருக்கேன். போன்ல பேசியிருக்கார். சாயந்திரமா சுஜாதா இங்கே வரப்போறதா சொல்லியிருக்கார்.”என்று தெரிவித்தார் கமல்.
“ஓ….சுஜாதா வரப்போறாரா?” என்றவர் படப்பிடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.


சற்று நேரம் கழித்து சுஜாதா வந்ததும் “இவர் முதலில் எழுத்தாளர், அப்புறம் கவிஞர், அப்புறம் ஒளிப்பதிவாளர், அப்புறம் டைரக்டர் - மொத்தத்தில் ஒரு படைப்பாளி” என்று பாலுமகேந்திராவை அறிமுகப்படுத்தினார் கமல்.

“இது நீங்களே எழுதினதா இந்தக் கதை? அப்புறம் எப்படி தெரியாத கன்னட மொழியில படம் எடுக்கறீங்க? தமிழ்லயே எடுக்க வேண்டியதுதானே” என்றார் சுஜாதா.
“உங்களுக்கு சினிமா ஃபீல்டைப் பற்றித் தெரியாது சார். எத்தனைப் பெரிய கொம்பனா இருந்தாலும் அவன் திறமையை வச்சு இங்கே அங்கீகரிக்க மாட்டான். வெற்றியை மட்டும்தான் ஒத்துக்குவான். இந்தப் படத்துக்கே தமிழ்ல எத்தனைப் பேரிடம் கேட்டிருக்கேன் தெரியுமா? எவனும் முன்வரலை. கமலும் ட்ரை பண்ணினார். கமல் நடிச்சுத்தர்றேன்னு சொன்னபிற்பாடுகூட எவனும் தயாரிக்க முன்வரலை. கன்னடத்தில் சின்ன பட்ஜெட் என்பதால் இங்கே தயாரிப்பாளர் கிடைச்சிருக்கார். எந்த மொழியாயிருந்தா என்ன முதல்ல நம்மை நிரூபிக்கணும்னு இறங்கியிருக்கேன். நமக்கு என்ன சார் நாம பேசறது சினிமா மொழிதானே?”


அதன்பிறகு அவர் படப்பிடிப்பில் ஈடுபட அவர் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்த சுஜாதா அவரிடம் காமிரா லென்ஸ் லைட்டிங் என்று தொழில்நுட்பங்களாக என்னென்னமோ பேசிக்கொண்டே இருந்தார்.
அடுத்து இரண்டொருநாள் கோகிலா படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது ஒன்றை கவனிக்க முடிந்தது.
அது நடிகை ஷோபாவுக்கும் பாலுமகேந்திராவுக்கும் இருந்த அந்நியோன்யம். அதுபற்றி அப்போதே பத்திரிகைகளில் செய்தி வந்துகொண்டிருந்ததும் பிறகு அது பெரிய அளவிலான செய்தியாக மாற்றம் பெற்றதும் எல்லாருக்கும் தெரியும்.


அதற்கு அடுத்து பாலுமகேந்திராவைச் சந்தித்தது ஒரு வருடத்திற்குப் பிறகு என்று நினைக்கிறேன்.
அப்போது கமலுக்கு சேஷாத்ரி என்றொரு உதவியாளர் இருந்தார். கமலுடைய சினிமா வரலாற்றில் அவருடைய முதல் உதவியாளர் இவர்தான். இருவரும் ஒன்றாக ஒரே வகுப்பில் படித்தவர்களாம். கமல் சினிமாவில் பெரிய ஆளானதும் இவர் கமலின் உதவியாளராகச் சேர்ந்துகொண்டார். கமல் மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்தபோதும் இவர்தான் அவருடைய உதவியாளராக இருந்தவர். அதன்பிறகுதான் ஏதோ காரணத்தால் கமல் இவரை விலக்கிவிட்டதாகச் சொல்வார்கள்.



சேஷாத்ரியிடமிருந்து போன் வந்தது. தான் அடுத்தநாள் பெங்களூர் வரப்போவதாகவும் ஒருநாள் தம்முடன் செலவிடமுடியுமா என்றும் கேட்டு போன் செய்திருந்தார்.
மறுநாள் சேஷாத்ரியைச் சந்தித்தபோது இது கமல் சம்பந்தப்பட்ட விஷயமில்லை என்றும் ‘கமலுக்கே இன்னமும் தெரியாது; அவரிடம் சொல்லவில்லை, விஷயம் நல்லபடியாய் முடிந்தால் அவரிடம் சொல்லி பர்மிஷன் வாங்கிக்கொள்வேன்’ என்றும் சொன்னார். அதாவது கோகிலா படத்தைக் கன்னடத்திலிருந்து தமிழுக்கு டப் செய்யும் உரிமையைத் தமக்கு வழங்கும்படி பாலுமகேந்திராவைக் கோரப்போவதாகவும், அவர் அதற்கு ஏற்பாடு செய்வாரானால் கமலின் செகரட்டரியாக இருந்துகொண்டே உபரியாக ஒரு பிசினஸைத் தம்மால் சுலபமாகச் செய்யமுடியும் என்றும் முடிவிலிருந்தார் அவர். இன்னமும் இதுபற்றி பாலுமகேந்திராவுக்கே சொல்லவில்லை என்றும் பெங்களூரில் இருக்கும் அவரை உடனடியாக சந்திக்கவிரும்புவதாகச் சொன்னபோது இன்றைக்கு வரச்சொல்லியிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.


பாலுமகேந்திரா வழக்கமாக பெங்களூர் வந்தால் தங்குவது செயிண்ட் மார்க்ஸ் ரோடு அருகிலிருக்கும் ஏர்லைன்ஸ் ஓட்டலில். எப்போதும் அங்குதான் தங்குவதாகவும், கோகிலா படத்திற்காக மட்டும்தான் அந்த தயாரிப்பாளர் ஏற்பாடு செய்திருந்த பராக் ஓட்டலில் தங்கியிருப்பதாகவும் ஏற்கெனவே அவர் சொல்லியிருந்தார். ஏர்லைன்ஸ் ஓட்டலும் அவருடைய ரசனைக்கு ஏற்றதாக ஏகப்பட்ட தோட்டமும் துரவுமாக இருக்கும்.
சேஷாத்ரியும் நானும் ஏர்லைன்ஸ் ஓட்டலுக்குச் சென்றிருந்தோம். எங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார் பாலுமகேந்திரா. வேறொரு பட ஒளிப்பதிவுக்காக பெங்களூர் வந்திருப்பதாகவும் இன்றைக்கு மதியத்துடன் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் ஓய்வெடுத்துக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.


சேஷாத்ரியின் கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.
கமல் நடித்த கோகிலா படத்தை டப் செய்யும் முடிவில் அந்தத் தயாரிப்பாளர் இல்லையென்றும், அப்படியே டப் செய்வதாக இருந்தாலும் அவராகவே டப் செய்து அவரேதான் தமிழகத்திலும் வெளியிடும் முடிவில் இருப்பதாகவும் வேறு யாருக்கும் தரப்போவதாக இல்லையென்றும் சொன்னார்.
அதைவிட முக்கியமாக, படத்தில் கமலே கன்னடம் பேசி நடித்திருப்பதால் டப் செய்வதை கமலே விரும்பவில்லை என்றும் டப் செய்யாமலேயே கன்னடத்திலேயே படத்தை வெளியிட்டு ஓடவைக்க முடியும் என்று கமல் விரும்புகிறார் என்றும் தெரிவித்தார்.
ஆக, வந்த விஷயம் டிராப் ஆனதும் வேறு விஷயங்கள் பேச ஆரம்பித்தோம்.


தமிழ் இலக்கியங்களிலும் தற்கால இலக்கியங்களிலும் பாலுமகேந்திராவுக்கு இருந்த ஈடுபாடும் அவருடைய வாசிப்பு அனுபவமும் புரிந்தது. சிவாஜி காலத்துக்கு முந்தைய படங்கள், சிவாஜியின் வருகைக்குப் பின்பான படங்கள், இப்போது கமல் ரஜனி என்று ஆரம்பித்திருப்பதால் இதற்குமேல் தமிழில் வரப்போகும் படங்கள், வரவேண்டிய படங்கள் என்று நிறையப் பேசினார். அன்றைய தினத்தில் மலையாளப் படங்களின் மீதான ஈடுபாடு அவரிடம் அபரிமிதமாக இருந்தது. 
“நானே உங்களை ஒரு மலையாளத்துக்காரர் என்றுதான் நினைத்திருந்தேன்” என்றேன்.
“நீங்கள் மட்டுமில்லை மொத்த இண்டஸ்ட்ரியுமே என்னை மலையாளத்துக்காரனாகத்தான் இன்னமும் நினைத்துக்கொண்டிருக்கிறது” என்று சிரித்தார்.
சினிமா இலக்கியம் என்பதற்குப் பின் அவருக்கு மிக உவப்பான விஷயம் மியூசிக் என்பது புரிந்தது.


அந்தக் காலத்தில் பிரபல மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர் எம்.பி.ஸ்ரீனிவாசன்- இவரும் ஒரு தமிழர்தான்.- ஒரு இசைக்குழுவை வைத்துக்கொண்டு வானொலியில் கோயர் முறையில் பிரமாதமான இசைத்தொகுப்பை வழங்கிக்கொண்டிருந்தார். எம்.பி.ஸ்ரீனிவாசன் இசையைப் பற்றியும் (கே.ஜே.ஏசுதாசைத் திரைப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தான்) அதே போன்ற கோயர் கூட்டத்தை வைத்துக்கொண்டு சலீல் சௌத்ரி வடக்கே பிரமாதப் படுத்திக்கொண்டிருப்பதையும் சிலாகித்துப் பேசினார். சலீல் சௌத்ரி பற்றிப் பேசியபோது மதுமதி செம்மீன் படங்களில் வந்த இசைத்தொகுப்பு குறித்தெல்லாம் பேசினார். இதனைப் பிற்பாடு அழியாத கோலங்கள் படத்தை எடுத்தபோது பாலுமகேந்திரா அதே சலீல் சௌத்ரியைத்தான் இசையமைப்பாளராகப் போட்டார் என்பதையும் இணைத்துப் பார்க்கவே தோன்றிற்று.


அழியாத கோலங்களில் வரும் ‘நான் எண்ணும் பொழுது’…… என்று எஸ்பிபி பாடிய பாடல் ஒரு மறக்கமுடியாத அபாரமான பாடல். (அதனை ‘நான் என்னும்பொழுது’ என்று பாடியிருப்பார் எஸ்பிபி. இரண்டு வார்த்தைகளுமே பொருந்தும்படித்தான் இருக்கும்).
‘நான் எண்ணும்பொழுது………..ஏதோ சுகம், எங்கோ தினம், செல்லும் மனது’ என்று வெகு சுகமாகக் கிளம்பும் பாடல் அது. பழைய நினைவுகளையும் பழைய எண்ணங்களையும் அடிமனதிற்குள் போய்க் கிளறி மேலே கொண்டுவந்து பழைய நினைவுகளுக்கு இழுத்துச் சென்று விட்டுவிட்டு வந்துவிடும் இசையைக் கொண்ட பாடல் அது.

நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை
என்றும் அது கலைவதில்லை
எண்ணங்களும் மறைவதில்லை – என்றுபாடி ‘அந்த நாள் அம்மா என்ன ஆனந்தமே’ என்று இறங்கும்போது நம் மனதை ஒரு வழி செய்திருக்கும் அந்த இசை.

அடுத்த தொகையறாவையும்,
ஆற்றிலே ஆற்றங்கரை ஊற்றினிலே
அங்குவந்த காற்றினிலே
தென்னை இளங்கீற்றினிலே – என்று செம ஈடுபாட்டோடு வார்த்தைகளைப் போட்டு விளையாடியிருப்பார் பாடலாசிரியர் கங்கைஅமரன். இந்த வரிகளுடன் நம்மை இழுத்துக் கொண்டுபோகும்போது எஸ்பிபியும் சரி சலீல் தாதாவும் சரி நம்முடைய மனதை ஒரு ரேஞ்சுக்குப் பதம் பார்த்துவிடுவார்கள்.
இசை பற்றிப் பேசுவதற்கு நடுவில் “ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே பேசுவோமே” என்ற பாலுமகேந்திரா போனை எடுத்து “நம்ம ஐஸ்கிரீம் ஒரு மூணு பிளேட் அனுப்புங்க” என்றார்.
ஐஸ்கிரீம் மூணு பிளேட்டா?

வந்தபிறகுதான் தெரிந்தது. அது எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பது.
கீழே ஒரு லேயர் முழுக்க ஸ்பாஞ்ஜ் கேக்.
அதற்கடுத்து நடுவில் ஐஸ் கிரீம் ஒரு லேயர்.
மறுபடியும் அதை மூடினதுபோல் திரும்பவும் ஸ்பாஞ்ஜ் கேக் இன்னொரு லேயர்…………..
அன்றைய தினத்தில் அப்படியொரு காம்பினேஷனுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டதில்லை என்பதால் அதன் சுவை எங்கோ தூக்கிக்கொண்டு போயிற்று.
“ரொம்பப் பிரமாதம்” என்றபோது “வேற சில இடங்கள்ள இந்தக் காம்பினேஷன்ல கிடைக்கும் ஆனா இந்த சுவைக்கு ஈடில்லை” என்றார் பாலுமகேந்திரா. “இந்த ஓட்டல்ல ரெகுலரா நான் வந்து தங்கறதுக்கு இது ஒரு காரணம். இங்கே இந்த ஐஸ்கிரீமும் மசால் தோசையும் பிரமாதம். அதற்காகவே இங்கே தங்கறேன்” என்றார்.

நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்து விடைபெற்று வந்தோம். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு பாலுமகேந்திராவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு திரும்பவும் அமையவில்லை. அழியாத கோலங்கள் வந்தபோது அதைப் பார்த்துப் பாராட்டி ஒரு கடிதம் எழுதியிருந்தேன். நன்றி தெரிவித்து பதில் கடிதம்  போட்டிருந்தார் பாலுமகேந்திரா.
அதன்பிறகு அவர் இயக்குநராகப் படங்கள் தயாரித்ததுவும், ஷோபா விஷயத்தில் அவர் பேசப்பட்டதுவும் ஷோபாவின் அசாதாரண மரணமும் அவரை மிகமிக பரபரப்புக்குள்ளான மனிதராக மாற்றிவிட்டிருந்தன. 

சில மனிதர்களின் சாதனைகள் அவர்களை எங்கோ உச்சத்தில் தூக்கி நிறுத்திவிடும். அதன்பிறகு எத்தனை தாறுமாறான மோசமான தகவல்கள் வந்தாலும் அவை அவர்களை அசைத்துப் பார்ப்பதில்லை. அவற்றையும் தாண்டி அதே செல்வாக்குடன் அல்லது அதைவிடவும் அதிக செல்வாக்குடன் நின்று நிலைத்துவிடுவார்கள்.
பாலு மகேந்திராவும் அத்தகையோரில் ஒருவர்தான்.


ஏனெனில் ஷோபாவின் மரணத்துக்குப் பிற்பாடு திரையுலகைச் சார்ந்த ஒரு பெரிய மனிதரிடம் பேசிக்கொண்டிருக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நண்பர் மனோபாலாவின் டைரக்ஷனில் ரஜனி நடித்துக்கொண்டிருந்த ஊர்க்காவலன் படத்தின் படப்பிடிப்பு அது.
“பாலுமகேந்திரா மிக அருமையான ரசனையுள்ள மனிதர். அற்புதமான கலைஞன். ஆனால் மற்ற எதைவிடவும் ஷோபா மீது அவர் வைத்த அளவுக்கு அதிகமான காதல் அவருக்குள்ளிருக்கும் கலைஞனைப் பாதித்துவிடாமல் இருக்கணும்” என்பதுபோல் அவரிடம் ஏதோ ஒரு கருத்தைச் சொன்னேன்.
அதற்கு அந்தப் பெரிய மனிதர் சொன்ன பதில்தான் வியக்க வைத்தது. “பாலுமகேந்திரா ஒரு அற்புதமான கலைஞர் அபாரமான திறமைசாலி என்பதிலெல்லாம் மாற்றுக் கருத்து எதுவுமில்லை. அவர் ஷோபா மேல வச்ச அதே காதலைத்தான் நிறையப்பேர் மேல வச்சிர்றாரு என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.


மத்தவங்களை விடுங்க. மூன்றாம்பிறை படத்தில் நடிச்ச அந்தக் கதாநாயகி மேல அவருக்கு உண்டான ‘காதலைக்’ கேட்டிங்கன்னா மூர்ச்சையே போட்டுருவீங்க. முக்கால்வாசிப் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. மாலையானதும் படப்பிடிப்பு முடிஞ்சிரும். ஷூட்டிங் முடிஞ்சதும் கதாநாயகியை வீட்டுக்கு அனுப்பமாட்டார்.
ஸ்டில் போட்டோஸ் எடுக்கணும் என்று சொல்லி நிறுத்திவைத்து விடுவார்.
சரிவுகளுக்கும் ஆபத்தான மலைப்பகுதிகளுக்கும் கூட்டிச்சென்று நிற்க வைத்து விதவிதமாக படங்கள் எடுப்பார். படங்கள் என்னவோ பிரமாதமாக வரும். சரி ஒரு காமிராக் கலைஞனுடைய கலைத்தாகம் எப்படியெல்லாம் வெளிப்படுது என்றுதானே பார்ப்போம்…… அப்படி எடுத்த அந்தப் படங்களை அன்றைய தினமே எக்ஸ்போஸ் பண்ணி பிரிண்ட் எடுத்து என்லார்ஜ் ஆக்கி பிரேம் போட்டுக்கொண்டு வரச்சொல்லுவார்.
ஊட்டியில் இதற்கெல்லாம் வசதி ஏது?
‘எனக்கு நாளைக் காலைக்குள்ள ரெடியாயிருக்கணும். கோயம்புத்தூருக்குப் போய் செய்துட்டு வந்துருங்க’ என்பார். அந்தப் படங்கள் வந்தால்தான் அடுத்த நாள் ஷூட்டிங் துவங்கும். வேறுவழியில்லாமல் கோயம்புத்தூர் போய் அவர் சொன்னபடி என்லார்ஜ் பண்ணி பிரேம் போட்டு எடுத்து வருவோம்.


தயாராக அழகான பொக்கே ஒன்று வாங்கி வைத்திருப்பார். இந்தப் புகைப்படத்துடன் என்னென்னமோ காதல் கவிதைகள் எல்லாம் எழுதி அந்தக் கதாநாயகிக்குப் பரிசளிப்பார்.
கதாநாயகி ஆச்சரியத்தில் மலர்ந்து போவாரே தவிர சிறிது நாட்களுக்குப்பின் இவரின் இத்தகைய டார்ச்சர்களிலிருந்து மீள்வது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார்” என்று சொல்லிச் சிரித்தார் அந்தப் பெரிய மனிதர்.
இந்தத் தகவல் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது.
ஒவ்வொருவர் ஒவ்வொரு கோணத்தில் ஒவ்வொன்றையும் அணுகுகிறார்கள் என்பதுதான் இங்கே நமக்குக் கிடைக்கும் சேதி.
இப்போது மறுபடியும் தலைப்பிற்கும் முதல் பாராவுக்கும் வருவோம்.


முதன் முதலாக பாலுமகேந்திராவைப் பார்த்தபோது அவர் கடிதம் எழுதுவதற்காக ஓடினதும் ஏதாவது ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு விமரிசனம் எழுத கமிட் ஆகியிருப்பார் என்று வல்லபன் சொன்னதற்குமான உண்மையான பதில் ஷோபா இறந்தபிறகுதான் கிடைத்தது.
ஷோபா பற்றிய கட்டுரையொன்றில் பெங்களூரின் இந்த ஃபிலிம் ஃபெஸ்டிவல் பற்றிக் குறிப்பிடும் பாலுமகேந்திரா ஒவ்வொரு படம் முடிந்ததும் தமது எண்ணங்களையும் கருத்துக்களையும் விமரிசனங்களையும் ஷோபாவுக்கு உடனுக்குடன் கடிதம் எழுதித் தெரிவித்ததைக் குறிப்பிடுகிறார். சுமார் நாற்பது ஐம்பது கடிதங்கள் எழுதினதாகவும், ஒவ்வொன்றையும் அந்தப் படங்கள் முடிந்து சில நிமிடங்களுக்குள் எழுதி போஸ்ட் செய்ததையும் குறிப்பிடுகிறார். அந்தக் கடிதங்கள்தாம் ஷோபாவை அவர்பால் காதல் கொள்ள வைத்தது என்பதாகவும் சொல்கிறார்.
ஷோபா பற்றிய தொடர் கட்டுரையில் கோகிலா படத்திற்காக பராக் ஓட்டலில் தங்கியிருந்தபோது நடைபெற்ற சம்பவம் ஒன்றைப் பற்றியும் மிகவும் உணர்ச்சிகரமாகச் சொல்கிறார்... கொஞ்சம் கோக்குமாக்கான விஷயம் அது.


அந்த ஓட்டலில் தங்கியிருந்தபோது இருவரும் மிகவும் அந்நியோன்யமாக இருந்த பொழுதில் ஷோபாவை மிக ஆழமாக முத்தமிட்டபோது ஷோபாவின் மூக்கிலிருந்த வைர மூக்குத்தி இவருடைய வாய்வழியாக வயிற்றுக்குள் போய்விட்டதாகவும் மறுநாள் டாய்லெட்டில் கையைவிட்டுத் தேடி அந்த மூக்குத்தியைக் கண்டெடுத்ததாகவும் அத்தனை ஆழமான காதலை அந்த தேவதை மீது வைத்திருந்தேன் என்பதாகவும் எழுதுகிறார். 

இலக்கியங்களிலும் காவியங்களிலும்கூட வரமுடியாத இத்தனை ஆழமான காதல் ஷோபா மீது என்றால்-
அது அந்தப் பெண்ணுடன் மட்டுமே நின்றிருக்கவேண்டும்!

ஆனால் அப்படியில்லை.
மேற்கொண்டு கிடைக்கிற செய்திகளில் பாலுமகேந்திராவின் காதல் மடைமாற்றப்பட்டு அர்ச்சனா மௌனிகா என்றெல்லாம் பயணித்ததை நிஜ வாழ்க்கையில் செய்திகளாக அறிகிறோம். மூன்றாம் பிறை படத்தின் சந்தர்ப்பத்தில் வேறொரு பெண்ணிடமும் இது போன்ற ஒரு காதலுக்கான முயற்சிகள் நடைபெற்றதாகவும் தெரியவருகிறது.
ஒரு மிகப்பெரிய ஒளிப்பதிவு மேதையையும் திரைப்படக் கலைஞனையும் புரிந்துகொள்ள முடிந்த நம்மால் இவர் காதல் மீது கொண்டிருந்த மதிப்பீடுகளையும் தாத்பர்யங்களையும் புரிந்துகொள்ளமுடியவில்லை.
வரிசையாக இவர் காதலைத் தொடர்ந்துகொண்டிருந்த விதமும் சரி, பெண்களும் அதற்கேற்ப வரிசையாக இவரிடம் விழுந்துகொண்டிருந்த முறையும் சரி கொஞ்சமும் புரிபடாத மர்மங்களாகவே போய்விட்டன.

எது எப்படியோ, அந்த மகத்தான கலைஞன் போய்ச் சேர்ந்துவிட்டான். அழியாத கோலங்கள் படத்தில் வரும் பாடலைப் போலவே

‘நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை
என்றும் அது கலைவதில்லை


எண்ணங்களும் மறைவதில்லை’- என்ற வார்த்தைகள் பாலுமகேந்திரா படைத்த திரைஓவியங்களுக்கு மட்டுமில்லை, இவர் வாழ்ந்துகாட்டிய வாழ்க்கைக்கும் பொருந்தக்கூடியதே.


http://amudhavan.blogspot.in
http://amudhavan.blogspot.in/2014/02/blog-post_16.html
நன்றி - கட்டுரை  எழுதியவர்  - அமுதவன் (பெங்களூர் )