19.7.08

இளையராஜாவின் இசை அற்புதம்

Illayaraja

http://www.pvv.ntnu.no/~kailasan/album/april_2000/cov5.jpg[ilayaraja.jpg]
இசையின் மகத்துவம் உலகம் அறிந்ததுதான். ஆனால் அந்த இசையைக் கையாளும் விதத்தில்தான் அற்புதங்கள் நிகழ்கின்றன. இசையை மிகச் சரியாகக் கையாள்வதில் ராஜாவுக்கு நிகர் ராஜாதான்.

சமீபத்தில் ராஜாவின் இசை ஒரு மிகப் பெரிய அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறது.

ஜெர்மனியைச் சேரந்த தம்பதிகள் அவர்கள். நிறைமாதத்தை எட்டும் தருவாயில் மனைவி. ஆனால் வயிற்றில் சிசுவின் அசைவையே உணர முடியவில்லை. பெர்லின் மருத்துவமனையில் புகழ்பெற்ற மருத்துவர் ஒருவரிடம் போய் செக்கப் செய்துள்ளனர். அவரும் பல சோதனைகள் மற்றும் ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிட்டு, குழந்தை அசைவின்றி இருப்பதற்கு என்ன காரணமென்று தெரியவில்லை. ஆனால் சிசுவுக்கு உயிர் இருக்கிறது என்று கூறி அனுப்பி வைத்துள்ளார்.

உயிர் இருந்தாலும் வயிற்றில் குழந்தை கை கால்களை அசைக்கும் போதுதானே ஒரு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் இருக்கும்...

என்ன செய்வதென்றே புரியாமல் தொடர்ந்து ஒவ்வொரு மருத்துவராகப் பார்த்து வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நம்பிக்கையிழந்து அமைதியாகிப் போனார்களாம். ஒருநாள் இளையராஜாவின் திருவாசகம் இசையை மன நிம்மதிக்காக ஓடவிட்டிருக்கிறார்கள்.

திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்ற சான்றோர் மொழி மெய்யாகிப் போனது.

என்ன ஆச்சர்யம்... சில நிமிடங்களில் வயிற்றில் ஒரு அசைவு தெரிந்துள்ளது. இசையை நிறுத்தியதும் அந்த அசைவும் நின்று விட்டது. தொடர்ந்து நான்குமுறை இப்படிப் போட்டுப் போட்டு நிறுத்தியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறை இசையைக் கேட்கும்போதும் குழந்தையின் அசைவு அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. இசை நின்றதும் சில வினாடிகளில் அசைவும் நின்று போனதாம். அப்போதிலிருந்து தொடர்ந்து ராஜாவின் இசைதான் வீடு முழுவதும் ஒலித்துக் கொண்டே இருந்திருக்கிறது.

சரியாகப் பத்தாவது மாதம், குழந்தை ஆரோக்கியமாக, அதுவும் அறுவைக்கு அவசியமின்றி சாதாரணமாகவே பிறந்து, மருத்துவர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

படிக்க கதை போலத் தோன்றினாலும், இச்சம்பவம் நிஜம்தான் என்பதை மெய்ப்பிக்க அந்த ஜெர்மன் தம்பதிகளே சென்னைக்கு வந்திருந்தனர் சில தினங்களுக்கு முன்பு. அவர்கள் முன்பின் இளையராஜாவைப் பார்த்ததும் இல்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவரது இசை மட்டும்தான்.

ராஜாவின் உதவியாளரிடம் விஷயத்தைச் சொன்னதும் அவர் உடனே ராஜாவிடம் விஷயத்தைக் கூற அந்தத் தம்பதிகளை நேரில் சந்தித்து குழந்தைக்கும் ஆசி வழங்கியிருக்கிறார் ராஜா.

ஜெர்மனியின் மருத்துவர்கள் பலரும் இந்த இசை அற்புதத்தை ஒப்புக் கொண்டதோடு, ராஜாவின் திருவாசம் சிடியை வாங்கிக் கேட்டு, மொழி புரியாவிட்டாலும் அந்த இசைக் கட்டுமானத்தில் வியந்து போயிருக்கிறார்கள்.

அதோடு மருத்துவத்துறையில் இந்திய இசையால் என்னென்ன அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்ற ஆராய்ச்சியிலும் ஜெர்மன் டாக்டர்களை இறங்க வைத்திருக்கிறது இந்த சம்பவம்.

உண்மையில் இந்த அதிசயத்தையெல்லாம் விஞ்ஞானத்தின் துணையின்றி பல ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்தவர்கள் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள். ஆனால் பாரம்பரியத்தை மறந்து போனதால் நமக்கு நம் பொக்கிஷங்களின் மதிப்பே தெரியாமல் போய்விட்டது.

போகர் மருத்துவத்தை நம்மவர்கள் ஓரங்கட்ட, அதை இன்னும் வெற்றிகரமாகக் கையாண்டு சாதனைகள் புரிகிறார்கள் ஜெர்மானியர்கள்.

இந்திய இசையை, இசைக் கலைஞர்களை பாதுகாக்க, கௌரவிக்க நாம் தவறிவிடக் கூடாது. இளையராஜா என்பவர் வெறும் திரை இசைக் கலைஞர் மட்டுமல்ல என்பதை அழுத்தம் திருத்தமாக உணர வைத்திருக்கும் சம்பவம் இது.
Source: Oneindia

17.7.08

ஆஸ்திரேலியாவில் அதி துல்லிய (High Definition) அலைச்சறுக்கு வீடியோ.

இந்த வீடியோ ஆஸ்திரேலியாவில் கர்ரம்பின் தங்க கடற்கரை என்னும் இடத்தில் அதி துல்லிய வீடியோ கேமரா மூலம் எடுக்கப்பட்டது. அதி துல்லிய வீடியோ காண வலது பக்கம் "HD is OFF" எனும் பொத்தானை இயக்கி "ON" செய்யவும்.
Fun with Twixtor - Surf at Currumbin from Geoff Charters on Vimeo.

15.7.08

ஷங்கரின் பட்ஜெட்

இயக்குனர் ஷங்கர் எப்போதும் தெளிவுடன் இருப்பவர். அவரே தன் 'ரோபோ' படத்திற்கு யாரை ஹீரோவாகப் போடுவது என்ற குழப்பத்தில் இருக்கிறார். ஆரம்பத்தில் கமல் நடிப்பார் என்ற பேச்சு அடிபட்டது.

அதன்பிறகு ரஜினி நடிப்பார் என்றும் சொல்லப்பட்டது. அதுவும் போய் தற்போது விக்ரம் நடிப்பதாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும், ரஜினி சொல்லும் முடிவில்தான் இருக்கிறது ஷங்கரின் கனவுப் படமான ரோபோ.

தற்போது லொகேஷன் பார்ப்பதற்காக கேமராமேனுடன் வியட்நாம், தென் ஆப்ரிக்கா, சுவிட்சர்லாந்த் என பறந்துகொண்டு இருக்கிறார். அந்தப் படத்தை எடுத்து முடிக்க குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படும்.

'சிவாஜி' படத்திற்கே இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டபோது அதைவிட பல மடங்கு பிரமாண்ட படமான ரோபோவுக்கு இன்னும் கூடுதலாக மாதங்கள் தேவைப்படலாம். இப்போது ஆகும் செலவுக்கே விழிப்பிதுங்கி நிற்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

பின்னே அடுத்த தயாரிப்பாளர் என்றால் 100 கோடி வரைக்கும் கூட படமெடுப்பார். தன் படக் கம்பெனியாக எஸ் பிக்சர்ஸில் மட்டும் மூன்று கோடி பட்ஜெட்டுக்கு மேல் கதை சொல்ல வேண்டாம் என்கிறார். அதான் காக்கைக்கு தன் குஞ்சு என்றாலும் பொன் குஞ்சு ஆச்சே.

நியூஸ். Webdudia




10.7.08

உலகத் தரத்திற்குத் தமிழ்ச் சினிமாவை நகர்த்திச்செல்லும் ‘தசாவதாரம்’










http://www.behindwoods.com/image-gallery-stills/photos-3/kamal/contest/kamal-01.JPG

அண்மைக் காலங்களில் வெளிவந்த படங்களிலேயே மிகவும் அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த படம்தான் தசாவதாரம். இதில் கமல் ஹாசன் பத்து வேடங்களில் நடித்திருக்கிறார். வந்து சில நாட்களுக்குள்ளேயே வசூலில் சாதனை படைத்துள்ள இந்தப்படம் கமல் நடித்த படங்களிலேயே அதிக வசூலைப் பெற்றபடமாகவும் கருதப்படுகிறது.

உலகிலே எந்தவொரு நிகழ்வும் தற்செயலானதல்ல, அவை ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவை என்பதை விளக்க முற்படுகிறது கதை. உயிரியல் ஆயுதத்திற்கெதிராக அமெரிக்காவில் பணிபுரியும் விஞ்ஞானியான கோவிந் (கமல்) ஒரு பரிசோதனையில் ஈடுபட்டுவருகிறார். அந்த முயற்சியில் அவர் பரிசோதிக்கும் உயிரியல் ஆயுத மாதிரியை வெளியாட்களுக்கு விற்கும் முயற்சிகள் நடைபெறுகிறது. அதனையறிந்த கோவிந் அதனைத் தடுக்க முயலுகிறார். அதன்போது அந்த உயிரியல் ஆயுத மாதிரி இந்தியாவிற்கு வந்துசேர்ந்துவிடுகிறது. அதனைத் தொடர்ந்து கோவிந்தும் உயிரியல் மாதிரியைக்கொள்ள முயன்றுவரும் வில்லனும் இந்தியா வருகின்றனர். கோவிந் பின்னால் வில்லனும் இவர்களின் பின்னால் இந்திய உளவுபிரிவு மற்றும் காவல்துறையும் ஓடுகின்றனர். இறுதியில் எவ்வாறு அந்த உயிரியல் ஆயுத மாதிரியிலிருந்து மக்கள் காப்பாற்றப்படுகின்றனர் என்பதைப் படம் காட்டுகிறது.

கதையை மேலோட்டமாகப் பார்த்தால் வழமையான சினிமாக் கதை, தமிழுக்கே உரித்தான சண்டை, பாட்டு, கதாநாயகன், வில்லன் இப்படி தமிழ்ச் சினிமாத்தனங்களிற்குக் குறைவில்லை. இவ்வாறு இந்தப் படத்தைப் பொழுதுபோக்குக்காகவும் பார்க்கலாம். கமல் தனது வழமையான ஆஸ்திக நாஸ்திக கொள்கைளை சொல்லவருகின்றார் என்று கூடக் கருதிக்கொள்ளலாம்.

ஆனால், இது கமலின் படம். முக்கியமாக அவரின் கதை-திரைக்கதை-வசனம், பெரிய எதிர்பார்ப்புகளுடன் ஏறக்குறைய கடந்த 2 வருடங்களாக எடுக்கப்பட்ட படம், நீதி மன்று ஏறிய படம் என்ற அடிப்படையில் சற்றுக் கூர்ந்து பார்க்கையில் திரைக்கதையும் பாத்திரப் படைப்பும் சேர்ந்து எம்மைச் சற்று கதிரைகளில் நிமிர்ந்து உட்காரவைக்கிறது. ஏன் இத்தனை கமல் ஹாசன்கள்? உலகிலேயே கூடிய பாத்திரங்களில் நடிக்கவேண்டும் என்ற அவாவா? மேலோட்டமாகப் பார்த்தோமானால் பெரும்பாலான பாத்திரங்கள் முக்கியத்துவமே இல்லாத பாத்திரங்கள் ; குணச்சித்திரப் பாத்திரங்கள்.

ஒரு நேர்காணலில் கமல் சொல்லியிருந்த ஒரு கருத்து என்னவெனில், ‘தனது சில படங்களை மக்கள் புரிந்துகொள்வதற்கு சில காலம் ஆகலாம். உதாரணமாக குணா படத்தைப் புரிந்துகொள்வதற்கு மக்களுக்கு 20 வருடங்கள் ஆகியிருக்கிறது’; ‘காதல் கொண்டேன்’ என்ற பட வெற்றியை குறித்து அவர் வெளியிட்ட கருத்து அது. தசாவதாரத்தைப் பொறுத்தவரையிலும் கூட இது உண்மையாக இருக்கலாம். மக்கள் சரியாகப் புரிந்துகொள்ள சில காலம் தேவைப்படலாம். ஏனெனில் அதற்குள் பொதிந்திருக்கும் விஞ்ஞானம் அத்தகையது.

இந்நாட்களில், ஆங்கிலப் பட உலகிலும் சரி, பேசப்பட்டுவரும் விடயங்கள்தான் Chaos தத்துவம் மற்றும் அதன் பகுதியாகக் கருதக்கூடிய Butterfly effect தத்துவம். Chaos தத்துவமானது சிக்கலான, எழுந்தமானமான தொகுதிகளின் குணவியல்புகளை ஆராயவும் அவற்றை விளக்கவும் உதவும் ஒரு தத்துவம். அவ்வாறான தொகுதிகளை Chaotic தொகுதிகள் என்று சொல்வார்கள். இவற்றின் இயக்கங்கள் எதிர்வு கூற முடியாதவை. இப்போது இது நடக்கிறது, எனவே இனி இது நடக்கும் என்று குறிசொல்லமுடியாத தொகுதிகள். இவ்வகையான தொகுதிகளில் ஒரு கட்டத்தில் நடக்கும் ஒரு சிறிய மாற்றம், ஒரு சிறிய அசைவு கூட எதிர்காலத்தில் ஒரு பாரிய விளைவை ஏற்படுத்தும். இதன் அடிப்படையில் உருவாகியதே Butterfly effect தத்துவம். அதாவது ஒரு சிறிய மாற்றம் பெரிய விளைவை ஏற்படுத்தலாம் என்று கூறுகிறது அத்தத்துவம்.

அதாவது சொல்வார்கள், ஆபிரிக்காவில் ஒரு வண்ணாத்திப்பூச்சி சிறகடிப்பின் அதனால் ஏற்படும் சிறுகாற்று அமெரிக்காவில் ஒரு சுழல்காற்றை ஏற்படுத்தலாமாம். இயற்கையில் உள்ள ஏறக்குறைய எல்லாத்தொகுதிகளுமே Chaotic தொகுதிகளாம். உதாரணமாக, வானிலை, புவித் தட்டுகளின் நகர்வுகள் போன்றவற்றைச் சொல்லாம். நாம் எவ்வளவு நுட்பமாக ஆய்தறிந்தாலும் வானிலை பற்றிய மிகச்சரியான எதிர்வுகூறல்களை எப்போதுமே செய்யமுடிவதில்லை.

நாம் இந்த Chaos தத்துவத்தை எடுத்துக்கொண்டால், இதனை இரண்டு விதமாகக் படமாக்கலாம். ஒன்று, நடக்கும் ஒரு சிறுமாற்றம் எவ்வாறு எதிர்காலத்தில் பாரிய மாற்றத்திற்குக் காரணமாகின்றன என்று காட்டுவதற்கு, ஆரம்பத்தில் நடக்கும் மாற்றங்களை மாற்றி மாற்றி, ஏற்படும் இறுதி விளைவுகளைக் காட்டலாம். இந்த அடிப்படையிலேயே Chaos தத்துவம் சம்பந்தமான ஆங்கிலப் படங்கள் பெரும்பாலும் தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக The Butterfly Effect, The Sound of Thunder போன்ற படங்களைக் கூறலாம். இத்தத்துவத்தைக் காட்டக்கூடிய மற்றமுறை, ஒரு பாரிய விளைவு நடத்திருக்கிறது, அதற்கான சிறிய சிறிய காரணிகள் எவை என்று காட்டுவது. ஆனால் இம்முறையிலுள்ள சிக்கல் என்னவெனில், இதனை மக்களுக்குப் புரிய வைப்பது சற்றுச் சிக்கலான விடயம், சில வேளை மக்கள் இக்காரணிகளின் பெறுமதியை, அவற்றின் தாக்கத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாது போய்விடலாம். ஆனால் கமல், வழமைபோன்று, ஆங்கிலப் படவுலகமே முயற்சிக்கச் சிந்திக்கும் இந்த இரண்டாவது முறைமையைக் கையெடுத்திருக்கிறார்.

அதாவது, ஒரு பெரிய நிகழ்வுக்கு அதற்கு முன்னான சிறிய நிகழ்வுகள் எவ்வாறு தாக்கத்தை ஏற்பட்டுத்துகின்றன என்பதை அவர் காட்ட முயன்றிருக்கிறார். இங்கேதான் அவருக்கு 10 வேடங்கள் கைகொடுக்கின்றன. எனவே பார்வையாளர்கள் குறைந்தது 10 வெவ்வேறு காரணிகள் இறுதி நிகழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்றாவது புரிந்துகொள்வார்கள். கமலின் இந்தப் பாரிய பரிசோதனை முயற்சியை முதலில் பாராட்டவேண்டும்.

இதன் அடிப்படையில் இப்படத்தினை பார்க்கையில், இந்தப் படத்தின் மைய நிகழ்வாக அல்லது அந்தப் பெரிய நிகழ்வாக நாம் பார்க்கக்கூடியது, எவ்வாறு உயிராயுதக் கிருமியில் இருந்து இந்தியா காப்பாற்றப்படுகிறது என்பதாகும். இந்த நிகழ்வில் எவ்வாறு உலகில் பல்வேறு திசைகளில், பல்வேறு மட்டங்களில் உள்ள காரணிகள் தாக்கங்களைச் செலுத்தியிருக்கின்றன என்று இந்தப் படம் காட்டுகிறது. அதற்கும் மேலாக, 12ம் நூற்றாண்டில் நடக்கும் ஒரு நிகழ்வுகூட 2004ம் ஆண்டில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் காட்டிநிற்கிறது இந்த தசாவாதரம்.

12ம் நூற்றாண்டுச் சோழர்காலத்தில், 2ம் குலோத்துங்க மன்னன் வைணவ எதிர்ப்பில் அனந்த நாராயண சிலையை கடலில் போடுகிறான். அந்த விக்கிரகத்துடன், முதலாவது கமலும் மூழ்கடிக்கப்படுகிறார். இதுவும் இறுதி நிகழ்விற்கு ஒரு காரணி என்று இதன் மூலம் அழுத்தங்கொடுக்கப்படுகிறது. அதாவது புவியோட்டில் இந்த சிலை வீழ்ந்ததால் ஏற்பட்ட சிறு அதிர்வுகூட சுனாமி ஏற்பட்டதற்கு ஒரு காரணியாக இருந்திருக்கலாம். நீங்கள் கேட்கலாம், என்ன இது... ஒரு சிலை புவியோட்டைப் பாதித்துவிடுமா என்று! பாதித்துவிடும் என்கிறது Butterfly effect தத்துவம்.

உயிரியல் ஆயுதம், அது எப்படி அமெரிக்காவிலிருந்து இந்தியக் கடற்கரைக்கு வந்தது என்பதனைக் காட்டுவதாகவே படத்தின் பெரும்பகுதி அமைகிறது. இங்கே மேலும் 9 கமல்ஹாசன்கள் வருகிறார்கள். அதாவது, கமல் 9 காரணிகளின் முக்கியத்துவத்தைக் காட்ட முயல்கிறார். இதில் வரும் ஒவ்வொரு கமலும் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு இருந்திருக்காவிடின், அவ்வாறு செயற்பட்டிருக்காவிடின் நாம் பார்த்த முடிவு கிட்டியிருக்காது. இதில் நாம் பார்ப்போமானால், கோவிந் பாத்திரம் மற்றும் வெள்ளைக்காரப் Fletcher பாத்திரத்தைத் தவிர ஏனைய பாத்திரங்கள், ஆங்காங்கே வந்துபோகின்றன. இடையில் சம்பந்தமே இல்லாத ஒரு மணலேற்றும் கதை, அதுதொடர்பான சர்ச்சைகள், அதில் ஒரு தலித் கமல். ஜப்பானில் ஒரு கமல், அமெரிக்க ஜனாதிபதியாகவும் ஒரு கமல்... இவ்வாறு எல்லாமட்டங்களிலும் எல்லா இடங்களிலும் உள்ள சின்னச் சின்னப் பாத்திரங்கள் கூட கதையில் அதன் முடிவில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

உதாரணமாக, ஜப்பான் கமல் ஹாசன் கடைசி நேரத்தில் வராவிடின், அந்த உயிரியல் ஆயுதம் கைமாறி உலகிற்கு ஆபத்தாகியிருக்கும். அமெரிக்க ஜனாதிபதி புஷ் குறித்த விமானத்தை திருப்பிக்கொண்டுவர ஒத்துக்கொண்டிருப்பின் என்ன நடந்திருக்கும். அந்த தலித் வாதி இல்லாவிட்டால் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இவ்வாறு படத்தில் வரும் எல்லா கமல் ஹாசன் பாத்திரங்களின் அசைவுகளும் இறுதிப் பெரு நிகழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியருக்கின்றன.

இந்தப் பத்து கமல் ஹாசன்களும் கதையை விளக்குவதற்காக எடுக்கப்பட்ட மாதிரிகள் மாத்திரமே. அதேபோன்று படத்தில் வரும் எல்லா நிகழ்வுகளுமே இறுதி நிகழ்விற்குக் காரணம். இடையில் வரும் எந்தவொரு நிகழ்வும் இடம்மாறியிருப்பின், அது பார்த்த முடிவைத் தந்திருக்காது!

அடுத்துப் பார்த்தோமானால், 12ம் நூற்றாண்டு வைஷ்ணவ ஆழ்வாரும் 2004ம் ஆண்டின் கோவிந்தராஜனும் ஒரேமாதிரி நெற்றிப்பொட்டில் அடி வாங்குகிறார்கள், இதுவும் Chaos தத்துவத்தின் ஒரு இயல்பேயாம். ஒரு கட்டத்தில் நிகழும் நிகழ்வு, இன்னொரு கட்டத்தில் நிகழும் நிகழ்வுடன் மேற்பொருந்தலாம், அதே மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்கிறது அத்தத்துவம்.

இதில் கமல் ஹாசன் சொல்ல வந்த முக்கிய விடயமாக நாம் கருதக்கூடியது, இந்த உலக அழிவில் அதில் நடக்கும் மாற்றங்களுக்கு அன்றும் சரி இன்றும் சரி நாம் எல்லோருமே காரணிகளாக இருக்கிறோம். அடுத்து நாம் பார்த்தோமானால், 12ம் நூற்றாண்டில் வரும் ஆழ்வார் கமல் ஹாசன் சிலையைக் கடலில் போட்டு ஏற்படப்போகும் சுனாமியைத் தடுக்க நினைக்கிறார்... அவரும் இறந்துபோகிறோர். 2004ம் ஆண்டின் தலித் கமல் ஹாசன், மணல் அள்ளுவதை நிறுத்தி அழிவைத் தடுக்க முயல்கிறார். அவரும் இறந்துபோகிறார். எனவே தனிமனிதராக இந்நிகழ்வுகளைத் தடுக்க முடியாது, நாம் எல்லோருமே மாறவேண்டும் என்று காட்ட முயல்கிறாரோ?

தசாவதாரம் படம் எவ்வாறு விஞ்ஞானம் பகர்கிறது என்பதை மட்டுமல்ல அதன் அழகியல்சார் அம்சங்களையும் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.

இதில் கமல் ஹாசன் ரங்கராஜன் நம்பி, கோவிந்தராஜன், அவ்தார் சிங், பல்ராம் நாயுடு, Fletcher, கலிபுல்லாஹ் முக்தார், நரஹாசி, ஜோர்ஜ் புஷ், பூவராகவன், கிருஷ்ணவேணி போன்ற பாத்திரங்களை ஏற்றிருக்கின்றார். இதன் மூலம் உலகத்தில் முதன் முதலாக பத்துவேடங்களில் நடித்த சாதனையை அவர் படைத்திருக்கிறார். இச்சாதனை தமிழ் சினிமாவில் நிகழ்ந்திருப்பது நாமெல்லாம் பெருமைப்படவேண்டிய விடயம். முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய விடயமென்னவெனில், இவற்றில் எல்லாப் பாத்திரங்களிலிமே கமலின் திறமையான நடிப்புத் வெளிப்பட்டிருக்கிறது, நடிப்பை எவ்விடத்திலுமே குறைகூற முடியாது. பாத்திரங்களின் ஒப்பனைகளில் சில போதாமைகள் இருந்தாலும், Body Language – மற்றும் குரல் பேச்சு மூலம் கமல் ஹாசன் பாத்திரங்களை எம்கண்முன் நிறுத்துகிறார்.

குறிப்பாக, பல்ராம் நாயுடு, Fletcher, பூவராகவன், ஜோர்ஜ் புஷ் போன்ற பாத்திரங்களைக் குறிப்பிடலாம். அபூர்வ சகோதரர்கள் படத்தில் கட்டையாக வந்த கமல் இதில் கலிபுல்லாஹ் முக்தார் பாத்திரத்தில் நெட்டையாகியும் சாதனை படத்திருக்கிறார். ரங்கராஜன் நம்பியின் பாத்திரம் கமலின் சுயரூபம் என்றாலும் அதில் அவருடைய நடிப்பு, அந்த வெறி... அவருக்கு நிகர் அவரே. உலகநாயகன் என்பதில் எந்தத் தப்புமே இல்லை.

பட ஓட்டத்தில் இடையில் ஒருவரை ஒருவர் துரத்துமிடங்களில் படம் சற்றுத் தொய்ந்துவிடுகிறது. ஆனால் அந்தத் தொய்வுகளை, காட்சி அமைப்பு மற்றும் கமேரா கோணங்கள் சலிப்பில்லாமால் இழுத்துச் செல்கின்றன. இசையமைப்பு மற்றும் பாடல்களைப் பொறுத்தவரையில் ‘கல்லை மட்டும் கண்டால்’ எனும் பாடலில் இருக்கும் உணர்வும் ஹரிகரனின் குரலும் இசையும் படப்பிடிப்பும் மிகத் திறமையாக உள்ளது. ‘முகுந்தா முகுந்தா’ பாடல் இதயத்தை வருடிச் செல்கிறது. பின்னணி இசையையும் குறை சொல்வதற்கில்லை.

படத்தில் வரும் Graphics காட்சிகளைப் பற்றியும் சொல்லாமல் இருக்கமுடியவில்லை. குறிப்பாக இறுதியாக வரும் சுனாமி காட்சி. நிட்சயமாக ஆங்கிலத்தரத்தில் இவை இல்லை ஆனாலும் இம்முயற்சிகளைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. சண்டைக் காட்சிகளும் பிரமிக்க வைக்கின்றன. தேவையான இடங்களில் படக்காட்சிகளை ஒரு வண்ணாத்திப் பூச்சி மூலம் தொடுத்து Butterfly effect தத்துவத்தைக் குறியீடாகக் காண்பிப்பது பாராட்டுக்குரியது .

திரைக்கதையில் கமல் தனது அரசியலையும் செய்யத் தவறவில்லை. பல இடங்களில் அவரது கருத்து வெளிப்பட்டிருக்கிறது. உதாரணமாக, ‘கடவுள் இல்லை என்று நான் சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்றே சொல்கிறேன்’, ‘மடம் என்றால் தப்பு நடக்காதா?’ போன்ற வசனங்களைக் குறிப்பிடலாம்.

பாத்திரப்படைப்பு, நடிப்பு, திரைக்கதை, படப்பிடிப்பு என எல்லாவற்றையும் சேர்த்து நோக்குமிடத்து கமல், தமிழ் திரையை உலக தரத்திற்கு நகர்த்திச் செல்கிறார் என்பதை ஐயமறத் தெரிந்துகொள்ளலாம். அதற்கான மற்றுமொரு படிக்கல்லாக தசாவதாரம் அமைந்துள்ளது என்பதில் எவ்வித ஐயமில்லை.


- நன்றி 'ஞானம்' கலை இலக்கியச் சஞ்சிகை. ஜூலை 2008

-கெ.சர்வேஸ்வரன், கணினி விஞ்ஞானம் மற்றும் இயந்திரவியற் துறை, மொரட்டுவைப் பல்கலைக்கழகம்.

இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் இலக்கிய சஞ்சிகையில் வந்த விமர்சனம். எனைய‌வ‌ர்க‌ள் பார்வைக்காக‌ இங்கே ப‌திவு செய்துள்ளேன்.

1. கமல் என்ற உலக நாயகன்.
ஒரு வேடத்தில் நடிக்கவே மிகவும் கஸ்டப்படும்போது(சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டால் அவர்களின் ரசிகர்கள் சண்டைக்கு வருவார்கள், நிச்சயமாக சூப்பர் ஸ்ரார் இந்தப்பட்டியலில் இல்லை) அசால்டாக 10 வேடங்கள் சில வேடங்கள் ஏற்கனவே கமலின் சில படங்களில் பார்த்திருந்தாலும், மாறுபட்ட குரல்களும் உடல் அசைவுகளும் பிரமிப்பையே ஏற்படுத்துகின்றன. ( டாக்டர் புருனேயின் பதிவில் லக்கி லுக் பிளட்சரின் ஸ்டைலை ரஜனியுடன் ஒப்பிடுகின்றார்). சிலவேடங்கள் மைதா மாவு மேக்கப் என்றாலும் கமல் தன் நியமுகத்துடன் மைக்கல் மதன காமராஜனில் செய்ததுபோல் கலிபுலாகானையும் தன் நிய முகத்துடன் உயரமாக காட்டியிருக்கலாம். ப்ளைட்சர், சீன நரஹி போன்றவை எப்படியோ முகம் மாற்றவேண்டியவை. ஆனாலும் படத்தின் மிகப்பெரிய சாதனை ஒன்றுக்கு மேற்பட்ட கேரக்டர்கள் ஒரே ப்ரேமில் வருவதுதான்.

2. திரைக்கதை
கேஎஸ்ரவிகுமார், மதன், மறைந்த சுஜாதா, கிரேசிமோகன் போன்ற பலர்திரைக்கதைவிவாதத்தில் ஈடுப்பட்டிருந்திருக்கிறார்கள்(தகவல் கேஎஸ்ரவிகுமார் ஜெயா டிவி ஹாசினி பேசும்படம்). ஆனாலும் கேஎஸ்ரவிகுமார் கூறியதுபோல் திரைக்கதைக்கு கமல் தான் முழுச் சொந்தக்காரர். காரணம் கமலின் திரைக்கதைக்கு தாங்கள் ஒரு சிற்பியைப்போல் தேவையற்ற சிலவற்றையும் தேவையான சிலவற்றையும் செதுக்கியதாகவும் கூறினார். ஏற்கனவே விருமாண்டியில் இருவரின் பார்வையில் திரைக்கதை அமைத்த கமல் இதில் ஒரே வேகத்தில் அமைத்த திரைக்கதை அமைத்தது பாராட்டுக்குரியது. அதிலும் 12 நூற்றாண்டுக்காட்சிகள் தவிர்த்து பின்னர் படம் அமெரிக்காவிலிருந்து சென்னை வரை ஒரே ஓட்டமாகத்தான் ஓடுகின்றது. கமல் தன்னுடைய முன்னைய படங்களில் ஒரு அறிஜீவித்தனத்துடன் திரைக்கதை அமைத்திருப்பார், இதனால் பலருக்கு விளங்கவில்லை அந்தக் குறை இந்தப்படத்தில் இல்லை.

3. வசனம்
கமலின் வசனங்கள் பல புரட்சிகரமான அல்லது முற்போக்குத்தனமான கருத்துக்களை கொண்டிருக்கின்றது. அதிலும் பலராம் நாயுடு அடிக்கும் பஞ்ச்கள் ஓஹோ ரகம். வசனங்களை எழுதிவாசகர்களை சலிப்படைய வைக்கவிரும்பவில்லை. படத்துடன் கூடிய சில வசனங்களில் கிரேசி மோகன்தனம் இருந்தாலும், இன்னொரு பதிவர் கூறியதுபோல் சிலவேளைகளில் கிரேசிமோகன் வசன எழுதிய படங்களில் கமலின் தலையீடு இருந்திருக்கலாம். ஆதலால் கமலின் வசனங்கள் கிரேசிமோகனின் வ்சனங்கள் ஆக மாறியிருக்கலாம். சில இடங்களில் சுஜாதா சாயல் அடிக்கின்ற அதே வேளை படத்தில் அடிக்கடி அசின் பெருமாளை கூவிகூவி அழைத்தது எங்கேயோ இடிக்கின்றது.

4. ஒளிப்பதிவு
ரவிவர்மனின் காமேரா பல இடங்களில் அசரவைக்கின்றது. அதிலும் ஆரம்ப காட்சிகளிலும் சென்னையை ஏரியல் வ்யூவில் எடுத்த காட்சிகள் புதுமை. அதேபோல் கல்லைக்கண்டால் பாடலிலும் ஒரு காட்சி கோவில் வாசலிலில் இருந்து கோபுரத்திற்க்கு மேலால் சென்று அடுத்த பக்கத்தில் நிற்கும் மக்களிடையே செல்லும் ஒரே ஷாட்டில் எடுத்த காட்சியும் மனதில் நிற்கிறது. இதில் கிராபிக்ஸ் வர இடமில்லை. அத்துடன் கிராபிக்சையும் இயற்கையான ஒளிப்பதிவையும் பல இடங்களில் கலந்து எது நியம் எது கிராபிக்ஸ் என கண்டுபிடிக்கமுடியாமல் செய்தது தொழில் நுட்பத்தின் உட்சக்கட்டம்(தமிழ் சினிமாவில்).

5. இயக்குனர் கே எஸ் ரவிகுமார்.
வரலாறு என்ற வெற்றிப்படத்தைக்கொடுத்த உடனேயே இந்தப்படத்தில் தொடர்ந்து உழைத்த உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. பஞ்சதந்திரம், அவ்வை சண்முகி, தெனாலி என ஏற்கனவே கமலுடன் இணைந்திருந்தாலும் இப்படத்தில் கேஎஸ்சின் ஸ்டைல் இல்லாமல் வித்தியாசமாக எடுத்திருக்கிறார். இறுதிக்காட்சியில் எப்படி மேக்கப் போடுகின்றார்கள் என்பதைக் காட்டியது மட்டும் இவரின் ஸ்பெசல்.

தசாவதாரம் அல்லது கமல் ஒரு நுண்ணரசியல்

க‌ம‌ல் ப‌ற்றிய‌ ஒரு நுண்ண‌ர‌சிய‌லை நுனிப்புல் மேய‌லாம் என‌ நினைக்கின்றேன்.

"உரக்கப் பேசும், உரக்க நடிக்கும் தமிழ் சினிமாவில் சற்று மென்மையாக, கற்பனையுடன், நம்பும் படி நடக்கும் கமல்ஹாசனிடம் தமிழில் நவசினிமாவில் உதயத்தை எதிர்பாக்கின்றேன்".
(சுஜாதாவின் கணையாழியின் கடைசிப்பக்கங்கள் அக்டோபர் 1976, இகாரஸ் பிரகாஸின் வலையில் மீள இட்டிருந்தார்). ந‌ன்றி கானாப்பிர‌பா,

1976 லேயே சுஜாதாவால் க‌ண்டுகொள்ள‌ப்ப‌ட்ட‌ ப‌ல‌வித‌ ப‌ரிணாம க‌ம‌ல் என்ற‌ ஒப்ப‌ற்ற‌ க‌லைஞ‌ர்(ன்) க‌லைஞானி, ப‌த்ம‌ஸ்ரீ, டாக்ட‌ர், உல‌க‌ நாய‌க‌ன் க‌ம‌லை இன்ன‌மும் ந‌ம்ம‌வ‌ர்க‌ள் க‌ண்டுகொள்ள‌வே இல்லை என்ற‌ ஆத‌ங்க‌ம் என‌க்கு ப‌ல‌ நாட்க‌ளாக‌ உண்டு. (சுஜாதா என்ன‌ பெரிய‌ ஆளா? என‌ச் சில‌ர் கேட்க‌லாம் நான் இங்கே சுஜாதாவை மேற்கோள் காட்டிய‌து அவ‌ரின் வ‌ரிக‌ளுக்கும் 1976 ஆம் ஆண்டுக்கும் ம‌ட்டுமே). இத‌ற்கான‌ கார‌ண‌ம் அல்ல‌து அரசிய‌ல் என்ன‌?

முதன்மைக் காரணம்:
கமல் ஒரு பகுத்தறிவுவாதியாக இருப்பதுதான். தமிழ் நாட்டின் சாபக்கேடு பெரும்பாலான மீடியாக்கள் ஏகாதிபத்தியவாதிகளிடம் அல்லது ஆன்மீகவாதிகளிடம் இருப்பது. (இத்தனைக்கும் மத்தியில் திராவிடக் கட்சி(கள்) ஆட்சி அமைப்பது தலைவர்களின் தலைமைத்துவமே ஒழிய வேறில்லை). இவர்கள் கமலைப் பார்க்கும் பார்வைகளும் கோணங்களும் மாறுபடும். சிலவேளை கமல் இடையிடையே இமயமலைக்குப் போய் வந்திருந்தால் பார்வை மாறியிருக்குமோ என்னவோ தெரியவில்லை. இதனால் கமலுக்கு அதிகம் பப்ளிசிட்டி கிடைப்பதில்லை. அண்மைக்கால சிறந்த உதாரணம் சிவாஜி பற்றி தினமும் செய்திபோட்ட ஊடகங்கள் தசாவதாரம் பற்றி அடக்கியே வாசித்தன. இதனால் சில குறிப்பிட்ட பிரிவினர் அல்லது சமூகத்தவர்களுக்கு கமலைப் பிடிப்பதில்லை. எப்படிப் பெரியாரை வெறுத்தார்களோ அதேபோல் கமலையும் வெறுக்கின்றார்கள்.(கடந்த சில வருட வலை மற்றும் இணைய அனுபவம்). அதனைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தும் காட்சி ஒன்று தசாவதாரத்தில் உண்டு. அசின் கமலின் தகப்பனாரின் பெயர் கேட்க அதற்க்கு கமல் ராமசாமி என பதில் அளிக்க உடனே அசின் " சீ அவனா? என்பார். படத்தில் அந்தக்காட்சி தெளிவாக விளங்காவிட்டாலும் ஆங்கில உபதலைப்பில் (that Atheist?) என அப்பட்டமாக போட்டுவிடுகிறார்கள்.

2.
கமலுக்கு எந்த ஒரு கட்சியின் சாயமும் அல்லது அரசியல் அறிவும் இல்லாதது. கலைஞரின் விழாவிலும் இருப்பார், ஜெயின் விழாவிலும் இருப்பார். எங்கேயும் இதுவரை அரசியல்பேசியதுமில்லை. இது அவருக்கு பலமாக இருந்தாலும் சிலவேளைகளில் பலவீனமுமாக இருக்கின்றது. இதற்க்கு சிறந்த உதாரணம் சூப்பர் ஸ்ரார் இவரின் பாபா படம் ஓடாததற்கான காரணங்களில் ஒன்றாக இவர் சில அரசியல்வாதிகளுடன் நடத்திய பனிப்போர்.

3
சில பகுத்தறிவுவாதிகள்: கமலின் ஜாதியை வைத்து அரசியல் நடாத்தும் சில பகுத்தறிவுவாதிகள்(லக்கி லுக் போன்றவர்கள் விதிவிலக்கு). இவர்கள் எப்போதும் கமலை ஜாதிக் கண் கொண்டுபார்ப்பதால் இது கமலுக்கு எதிர்வினையாகவே அமைகின்றது. சிலவேளைகளில் கமலும் இதற்க்கு சார்பானவர் போல் நடந்துகொள்கின்றார். சமீபத்திய உதாரணம் தசாவதாரம் இராமணுய நம்பியும் சில பாத்திரங்களில் தொனிக்கும் வைஷ்ணவப்பெயர்களும் (கோவிந்த், பல்ராம், பூவராகவன்). சுஜாதா இருந்தகாலத்தில் ஆரம்பமான படம் ஆகவே சிலசமயம் சுஜாதா இந்தப் பெயர்களைத் தெரிவிசெய்திருக்கலாம். கமல் தன்னைப் பூணூல் இல்லாத மாமிசம் உண்கின்ற பிராமணராக காட்டிக்கொண்டாலும், கமலை சந்தேகக் கண்ணோடு பார்ப்பவர்கள் தான் அதிகம். கமல் கலைஞரின் செல்லப்பிள்ளை என்பதை ஏனோ பலர் மறந்துவிடுகிறார்கள். திலீபன் என்ற வலைப்பதிவரின் ஒரு பதிப்பை இணைக்கின்றேன் படித்துப்பாருங்கள்.
கசக்கும் உண்மை

4.
வேண்டுமென்று எதிர்ப்பவர்கள்:
இந்த வகைக்குள் இராமகோபாலன் போன்றவர்கள் அடங்குவார்கள். விருமாண்டி படத்தின் தலைப்பை மாற்றச் சொன்னவர்கள் படம் எங்கும் கத்தியும் இரத்தமும் என கூவியவர்கள். அதன்பின்னர்வந்த எத்தனையோ படங்களுக்கு (அண்மையில் வெளிவந்த படங்களில் அதிக வன்முறைப்படம் போக்கிரி) எனோ கத்துவதுமில்லை கூவுவதுமில்லை. இதேபோல் தான் சமயப்பற்றாளர்கள். தசாவதாரம் படம் பெருமாளை இழிவுபடுத்துகின்றது என வழக்குப்போட்டவர்கள் படத்தைப்பார்த்தல் அங்கே இழிவாக எதுவும் இல்லை. பெருமாளே பெருமாளே என அசின் கூப்பிட்ட குரலுக்கு வெங்கடேசப்பெருமான் நிச்சயம் அசினுக்கு வைகுண்டப் பதவி கொடுக்கவேண்டும். இப்படியான சில கமலை மட்டுமே எதிர்த்து வழக்குப்போடும் மனநோயாளிகளுக்கு எதிராக யாரும் வழக்குப்போடுவதில்லை. எத்தனை மெஹா சீரியல்களிலும், படங்களிலும் மதவிடயங்களை இழிவுபடுத்துகிறார்கள், மலினப்படுத்துகிறார்கள் ஆனால் எவரும் அவற்றைச் சீண்டுவதில்லை.

5.
இறுதியாக கமல் ரசிகர்மன்றங்களை கலைத்து நற்பணி மன்றங்களாக்கி இரத்த தானம் , கண்தானம், உடல் தானம் போன்ற நற்பணிகளைச் செய்துவருகின்றார். பெரும்பாலான கமல் ரசிகர்கள்மன்றங்கள்போல் இல்லாமல் இவை வித்தியாசமாக நடந்துகொள்கின்றன. ரஜனி ரசிகர்மன்றங்களும் சில அரசியல்கட்சிகளும் போதினவோ அப்படி மோதும் ஆற்றல் கமல் மன்றங்களுக்கு இல்லை. அப்படியிருந்திருந்தால் பொய் வழக்குக்ப்போடுபவர்கள் கொஞ்சமாவது அமைதியாக இருப்பார்கள். கமல் அன்பேசிவம் நல்லசிவத்தைப்போல் இல்லாமல் வேட்டையாடு விளையாடு ராகவனைப்போல் மாறவேண்டும். இல்லையென்றால் கமலுக்கு அதிக வ்ழக்குகள் சந்தித்த நடிகன் என்ற இன்னொரு சாதனையும் சேர்ந்துவிடும்.

இப்படியான காரணங்களால் தான் கமலின் புகழ் இன்னமும் அவருக்கு கிடைக்கவேண்டியளவு கிடைக்கவில்லை. கமல் வேறு ஒரு மாநிலத்திலையோ அல்லது இன்னொரு நாட்டிலையோ பிறந்திருந்தால் இன்றைக்கு அவர் போற்றிபுகழப்பட்டிருப்பார். இதே நிலை நடிகர் திலத்துக்கும் ஏற்பட்டது. ஆனாலும் இறுதிக்காலத்தில் அவருக்கு கிடைக்கவேண்டிய மரியாதைகள் கிடைத்தன. இன்னும் கிடைக்காமல் இருக்கும் இருவர் மெல்லிசை மன்னரும், இசைஞானியும்.

கமல் கமல்தான்..........................



நண்பர் ஒருவர் தசாவதாரம் பார்க்கவில்லை போகலாமா என்று அழைத்ததின் பேரில் (உண்மையில் படத்தை திரைஅரங்கில் மாற்றி இருப்பார்கள் என்று நினைத்தேன்) ஷார்ஜாவில் உள்ள கான்கார்ட் திரை அரங்கிற்கு சென்றோம், உண்மையில் ஆச்சரியம் இன்னும் வெற்றிகரமாக ஓடி கொண்டிருந்தது, அதுவும் நாலு முப்பது மணிக்கு தெலுங்கு பதிப்பாகவும், இரவு பத்தரை மணிக்கு தமிழ் பதிப்பாகவும். உண்மையில் அவ்வளவு கூட்டத்தை இரவு நேரத்தில் நான் எதிர்பார்க்கவில்லை.
இதன் இடையே அலுவலகத்தில் பணிபுரியும் வட இந்திய நண்பர்கள் ஹிந்தி மொழியில் எப்போது திரை இடுவார்கள் என்று கேட்டு நச்சரிப்பது உண்மையில் ஒரு தமிழனுக்கு கிடைத்த பாராட்டகவே கருதுகிறேன். அதிலும் ஒரு வட இந்திய நண்பர் நான் அடிக்கடி பாடும் "கல்லை மட்டும்" பாடலை தன் கைபேசிக்கு மாற்றி இரண்டு நாள் கழித்து தமிழ் நண்பர்கள் சாப்பிடும் இடத்திற்கு வந்து பாடிக்காட்டியது உண்மையில் எங்களை மிரள வைத்தது.

தமிழ்மணத்தில் சிலர் எழுதுவது போல் சாதி பற்றுடன் படம் எடுத்து உள்ளார் கமல் என்று கூறுவது அவர்களின் சிறுபிள்ளைதனத்தை தான் காட்டுகிறது.
மீண்டும் ஒருமுறை தசாவதாரத்தை பாருங்கள் அவரின் அரசியல் உங்களுக்கு புரியும்.

கலைஞர் அவர்கள் கூறியது போல் கமல் உண்மையில் ஒரு கலைஞானி தான்.


படங்கள் உதவி :- ஆர்குட்

சாதித்த தசாவதாரம் - ‍ நக்கீரன்

கமல், கே.எஸ்.ரவிகுமார், ஆஸ்கார் ரவிச்சந்திரன் இந்த மூன்று தமிழர்களின் கூட்டணியில் மிகப்பிரமாண்டமாக உருவெடுத்திருக்கிறது தசாவதாரம். இந்தப்படத்தில் கமல் மாறுபட்ட பத்து கெட்டப்புகளில் தோன்றி திரை ரசிகர்களை உள்ளபடியே திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறார். கிராபிக்ஸ்சின் தோழமையோடு இந்தப்படத்தில் அவர் கையாண்டிருக்கும் டெக்னிக்கல் உத்திகளும் காட்சியமைப்புகளும் கோலிவுட் தரப்பையே உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறது. தனது படங்களில் அதிக ரிஸ்க் எடுத்து நடிக்கும் கமல் சில படங்களில் கமர்ஷியல் ரீதியான வெற்றிக்கோட்டைத் தொடமுடியாமல் போனதும் உண்டு.

தமிழர்களின் இந்தக் கடுமையான தசாவதார உழைப்பிற்க்கு உரிய வெற்றி கிடைத்துக்கொண்டிருக்கிறதா? வசூல் எப்படி? என்பதை அறிய களம் இறங்கினோம்.

முதலில் தசாவதாரத்தை உருவாக்க கோடிக்கணக்கில் கரன்ஸிகளை இறைத்திருகும் அதன் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனை சந்தித்தபோது உற்சாகமாகப் பேச ஆரம்பித்த அவர். " தமிழ் நாட்டில் மட்டும் தினசரி 1250 காட்சிகள் ஓடிக்கிட்டு இருக்கு, அதோட இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஸ்ரீ லங்கா, பிரான்ஸ், அமெரிக்கா, நார்வே இப்படிப் பல வெளிநாடுகளிலும் வெளிமாநிலங்களிலுமா 1755 காட்சிகளும் ஓடிக்கிட்டு இருக்கு ஆக தினசரி 3000 காட்சிகள் உலகம் முழுக்க ஹவுஸ்புல்லாக ஓடுவதால் நாங்கள் வசூல் கடலில் திக்குமுக்காடிக்கிட்டு இருக்கோம், எங்களைப் பொறுத்தவரை கமல் சாதனை நாயகனாக மட்டுமல்ல வசூல் நாயகனாகவும் இருக்கிறார்" எனப் புல்லரித்தபடி பேசினார்.

இவர் சொல்வது சரிதானா? சென்னை சத்யம் தியேட்டர் மேலாளரான கண்ணையாவிடமே கேட்டோம் "ஆமாங்க எங்க தியேட்டரின் 40 வருட வரலாற்றில் 14 நாள்ல 90 லட்ச ரூபாய்க்கு மேல வசூல் செய்த வசூலான ஒரே படம் தசாவதாரம் மட்டும்தாங்க" என்கிறார் அவரும் உற்சாகமாக.

மாயாஜால் திரையரங்க மேலாளர் மீனாட்சி சுந்தரமோ, "ரஜனியின் சிவாஜி படம் 118 நாள் ஓடி ஒரு கோடியே 12 லட்சத்தை வசூலித்தது ஆனா தசாவதாரமோ 17 நாள்லேயே 92 லட்ச ரூபாயத் வசூலாக குவிச்சிருக்கு. வொர்க்கிங்ஸ் டேஸ்ல கூட கூட்டம் குறையல இது உலக சாதனைதான்" என அவரும் தன் பங்கிற்க்கு சிலாகித்தார்.

தசாவதார விநியோகஸ்தர்களில் ஒருவரான பாண்டிச்சேரி கண்ணனோ, "ரொம்ப காலமாக சினிமாமேல வெறுப்பில இருந்த வயதான பெண்களும் ஆச்சாரமான பெண்களும் இந்தப் படத்துக்கு வர்தறைப் பார்க்கமுடியுது. அதேபோல் பொதுவாக கமல் படத்துக்கு ரிபீட் ஆடியன்ஸ் வரமாட்டாங்க ஆனா இதுக்கு ரிபீட் ஆடியன்ஸ் வர்றதையும் காணமுடியுது. பகுத்தறிவு பேசும் கமல் இதில் ஆன்மிகமும் பேசியிருப்பதால்தான் பெண்கள் கூட்டம் அதிகமாக வருது" என தன் கணிப்பையும் அவர் சொல்ல

"சிவாஜி" படம் நஸ்டம் என்று கோர்ட்டுக்குப்போனவராச்சே நீங்க ரஜனி மீதான அந்தக் கோபத்தில்தான் இப்ப கமலைத் தூக்குறீங்களா? என அவரை நாம் கலாய்க்க "அப்படியில்லீங்க சிவாஜி பட விசயத்தில் நாங்க நஸ்டப்பட்டதும் உண்மை, இப்ப லாபம் பார்க்கிறது உண்மை" என்றார் சீரியசாகவே.

மற்ற மாநிலங்களின் பல்ஸ் ரேட்? கேரளா எந்தா பரயுன்னு? விநியோகஸ்தர் ஹென்றியைக் கேட்டோம் அவரோ, " நான் பரயுறதைவிட திருவனந்தபுரம் பத்மநாபா தியேட்டர் முதலாளி கிரிஷ் சந்திரன் கிட்ட பேசுங்க" என்று அவரைக் கைகாட்டினார். கிரிஷ் சந்திரனோ "இவிட மம்முட்டி, மோகன்லால் படங்கள் கூட இப்படியொரு வல்லிய ஓபனிங் கண்டதில்லை. ஈ ஸ்டேட்ல 82 தியேட்டர்ல படம் ரிலீசாகிட்டிருக்கு. மேக்கொண்டு 27 தியேட்டர்காரங்க காத்திட்டிருக்காங்க. இந்த மழைக்காலத்திலும் கூட்டம் நிறைய வருது. மொத்தத்தில் சாரே படம் பிரமாதமாக்கும்" என்றார் பூரித்தபடி.

ஆந்திரா ஏமி செப்புதுன்னாதி? விநியோகஸ்தர் சோபாவிடம் நாம் மாட்லாடியபோது "எங்க சூப்பர் ஸ்ரார் சிரஞ்சீவியோட தாகூர் படத்தின் வசூல் 25 கோடி ரூபா. இந்த பிரேக்கை தசாவதாரம் உடைச்சிடும்போலிருக்கு. இதன் மெகா ஹிட்டைப்பார்த்து இங்க பல ஹிரோக்கள் தங்கள் பட ரீலீசை தள்ளிவைச்சிட்டாங்க. ஒரு சாதரண ரசிகையாக இருந்துசொல்றேன் பல்ராம் நாயுடு கேரக்டரை எங்க ஜனங்க ரொம்ப ரசிக்கிறாங்க. அந்த கிழவி கேரக்டரையும் பெண்கள் சிலாகிக்கிறாங்க. சுனாமி காட்சிகளின் அதிர்ச்சியூட்டும் பிரமாண்டம் கூட ரசிகர்களைப் பிரமிக்கவைக்குது ஒட்டுமொத்ததில் ஆந்திராவே கமலை ஆராதிக்குது" என்கிறார் உணர்ச்சிமயமாய்.

வாட்ஸ் அப் இன் அமெரிக்கா? விநியோகஸ்தர் ஜெயவேல் முருகனோ " யு.எஸ்.ஏவில் ஒரே நேரத்தில் 60 சிட்டிகளில் ரிலீசான படம் இதாத்தான் இருக்கும் இவ்வளவு பிரமாண்டமாக ஒரு தமிழ்ப்படமா என்று அமெரிக்காரர்களே வியக்கிறாங்க. கமலின் பத்து கெட்டப்பும் அவங்களைப் பிரமிக்க வைக்கிறது. அவங்க உணர்ச்சிவசப்பட்டு எங்க கைகளை குலுக்கிப்பாராட்டுகிறாங்க. கமலின் இந்த தசாவதார சூறாவளியில் அமிதாப்பின் சர்க்கார் ராஜ் படம்கூட ஆட்டம் கண்டிருக்கு. மொத்தத்தில் தசாவதாரம் எல்லா வகையிலும் பிரமிப்பு" என்றார் பலத்த சிரிப்போடு.

நார்த் இண்டியா கியா கேத்தா ஹே? இந்தி டப்பிங்கில் 400 காப்பிகள் ரெடியாவதில் தாமதம் ஏற்பட்டதால் பாலிவுட்காரர்களுக்கு இன்னும் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தசாவதாரத்திற்க்காய் தவமிருக்கிறார்கள்.

உலகநாயகனான கமல் இந்தப்படத்தின் மூலம் இன்றைய தேதிக்கு இவரே என்று சொல்லும் அளவிற்கு கலெக்சன் நாயகனாக பதினோராவது அவதாரம் எடுத்திருக்கிறார். மொத்தத்தில் தமிழர்களின் இந்தத் திரைக்கூட்டணி உலக அளவில் மெஹா வெற்றியை தொட்டுக்கொண்டிருப்பதற்காக நாம் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.

தீர்க்கதரிசி கமல்

பின்னால் நடை பெறப்போகும் பல விஷயங்களை கணிப்பதில் அவர் ஒரு திறமைசாலி

1) 16 வயதினிலே படப்பிடிப்பில் ரஜினியை உதவி இயக்குனர்கள் மதிக்காத போது அவர்களிடம் கமல் சொன்னது " இவர்கிட்ட கால்ஷீட் கேட்டு நீங்கள் அலையிற காலம் வரும்"

2) சிங்கார வேலன் படப்பிடிப்பில் வடிவேலை கவனித்து தேவர் மகனில் வலுவான வேடம் கொடுத்தது

3) முள்ளும் மலரும் பட செந்தாழம் பூவில் பாடலைக்கேட்டு அதை படமெடுக்க முடியாத பணத்தட்டுப்பாட்டை அறிந்து இது கண்டிப்பாக படத்தில் இருக்க வேண்டும் என்று அதற்கு தேவையான வசதி செய்து தந்தது

4) மஹாநதி - சீட்டு கம்பெனி

5) மக்கள் தியெட்டருக்கு வரவேண்டுமென்றால் வசதி செய்ய வேண்டும் என்று அபிராமி தியேட்டருக்கு 95 ல் டால்பி சிஸ்டம் கொண்டு வந்தது. அதன்பின் தான் பல திரையரங்குகள் வசதிகளை மேம்படுத்தின

6) ஆளவந்தான் படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிட சொன்னது (அப்போது அவர் அளித்த பேட்டியில் திருட்டு வி சி டி தவிர்க்கவும், மக்கள் எளிதில் திரையரங்கை அடையவும் இது உதவும் என்றார். அப்பட தோல்வியால் இது எடுபடவில்லை. ஆனால் இப்பொது இதுதான் ட்ரெண்ட்). ஓடும் நாள் முக்கியமில்லை வசூல் தான் முக்கியம் என்று அன்று சன் டிவி பேட்டியில் (2001) சொன்னது இப்பொழுது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது

7) சமீபத்தில் அவர் சத்யம் சினிமாஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் கூட இதைப் பற்றி சொல்லிஉள்ளார். (வாழைப்பழம் எல்லா இடத்திலயும் கிடைக்கிற மாதிரி நம்ம படம் கிடைக்கணும். இட்லி வாங்க, பான் போட வெளிய வர்ற ஆளு நம்ம படத்த தவற விடக்கூடாது.)

8) ஒரு நடிகன் தன் உடல், முக அமைப்பை மாற்றுவதன் மூலம் கதாசிரியனுக்கு சுதந்திரம் கொடுக்கிறான் என்ற அவர் கருத்தாலேயெ இப்போது விக்ரம், சூர்யா வால் நல்ல கதை அம்ச படங்களை கொடுக்க முடிகிறது

9) சத்யராஜ் - கடமை கண்னியம் கட்டுப்பாடு
நாசர் - மகளிர் மட்டும்
மாதவன் - நள தமயந்தி
பசுபதி - மும்பை எக்ஸ்பிரஸ்
என தன் தயாரிப்புகளின் மூலம் இவர்களின் பழைய முகத்தை மாற்றியவர் நம்மவரே

10) கிரேசி மோஹன் அவர்களின் ஒரு நாடகத்தைப் பார்த்தே அபூர்வ சகோதரர்களில் வசனகர்த்தா வாய்ப்பை வழங்கியது

மன்மோகன் சிங்கின் தசாவதாரம்!

From Ananda Vikatan :


ManmohanDasavathar

வன் ஜார்ஜ் புஷ்ஷின் சீடன் ரங்கராஜ நம்பிசிங். ஒரு பட்டாம்பூச்சியின் சிறகு அசைவதற்கும் பிரகாஷ் காரத்தின் கோபத்துக்கும்கூட ஒரு தொடர்பு இருக்கிறது. இதைத்தான் மேற்கத்திய சிந்தனை கேயாஸ் தியரி என்று சரியாகச் சொல்கிறது. சாமியையே நம்பாத இந்த இடதுசாரிகள் ஏன் இப்போது சாமி வந்தது மாதிரி ஆடுகிறார்கள் என்பதை விளக்க வேண்டுமானால், குறைந்தபட்சம் பிரெஞ்சுப் புரட்சி நடந்த காலத்துக்குப் போக வேண்டும். ‘யோவ்! அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை!’ என்று நீங்கள் கதறினால், குறைந்தபட்சம் ரஷ்யா வரை, வேண்டாம்… சீனா வரையாவது வாருங்கள். இதோ கதை சொல்லும் நானே கதையின் நாயகன் ஆனேன்.காங்கிரசும் பி.ஜே.பியும் இந்தியாவுக்குள் அடியெடுத்து வைக்காத காலம் அது. கம்யூனிஸ்டுகளும் நிலப்பிரபுக்களும் இரண்டாகப் பிரிந்து மோதிக்கொண்ட ஏதோ ஒரு நூற்றாண்டு. ‘ஓம் நமோ அமெரிக்கா ஒழிக!’ என்ற பன்னிரண்டு எழுத்து மந்திரத்தைத்தான் அனைவரும் உச்சரிக்க வேண்டும் என்று 59ம் கம்யூனிஸ்ட் ஆணையிட்டான். ‘ரங்கராஜநம்பி சிங்’ அதை ஏற்க மறுத்தான் ‘அமெரிக்காவை மட்டும் பார்த்தால் ஆட்சி நிலைக்காது. ஆட்சியை மட்டும் பார்த்தால் அமெரிக்கா நிற்காது’ என்று பின்னணியில் பாடல் ஒலிக்க, அவரை அவரது கூட்டணிக் கட்சிகளோடு கட்டி தேர்தல் கடலில் தள்ளிவிட்டான்.

கோவிந்த் சிங்: ஸீ… இந்த அடாமிக் அக்ரிமென்ட் பத்தி பேச எங்க போனாலும் இந்த ஃப்ளெட்சர் மாதிரி கம்யூனிஸ்டு கள் ஃபாலோ பண்ணிட்டேஇருக் காங்க. அவங்ககிட்ட இருந்து தப்பிக்கணும்னா கையில் வெச்சி ருக்கிற அடாமிக் அக்ரிமென்ட் டைத் தூக்கி முலாயம்சிங்கோட பிராண்ட் நியூ பி.எம்.டபிள்யூ கார்ல போட்டுற வேண்டியது தான். அவரு கில்லாடி அதை அப்படியே பிடிச்சுக்கிட்டு அப்துல் கலாமோடு தப்பிச்சிருவாரு.

கிருஷ்ணவேணி பாட்டி சிங்: ”ஏன்டா… பிரம்மஹஸ்தி இந்த ஒப்பந்தத்தைப் பெருமாள் சிலைக்குள்ள போட்றதுக்கு பதிலாராமர் சிலைக்குள்ள போட்டுட்டா…பி.ஜே.பி. கலவரமாகும். மாயாவதியின் யானைக்கு மதம் பிடித்து அரசியல் கட்சிகளையெல்லாம் தூக்கியடிக்கும். காய்கறி வண்டியில கோவிந்த் என் பேத்தியைக் கட்டிப்பிடிச்சுட்டுப் போற மாதிரி நாம அணுசக்தி ஒப்பந் தத்தைக் கட்டி எடுத்துக்கிட்டு அமெரிக்கா போயி ஆராமுதனைப் பார்த்துடலாம்.

பல்ராம் நாயுடு சிங்: என்னைவிடப் பெரிய சயன்டிஸ்ட் வேணும்னா… அப்துல் கலாமைக் கூப்பிடலாமானு சும்மா ஒரு பேச்சுக்குதான் சொன்னேன். இந்த முலாயம் உண்மையிலேயே அப்துல் கலாமைக் கூட்டிட்டு வந்துட்டாரு. இந்த கம்யூனிஸ்டுங்க என்னைவிட இந்தசப்ஜெக்ட்ல மோசமா இருக்காங்க. ‘பை தி வே… முலாயம் நீரு தெலுகா?”

கலிஃபுல்லா கான் சிங்: சார் இந்த ஒப்பந்தத்துல கையெழுத்து போட்டாச்சுன்னா… நம்ம நாடு என்னைவிட உயரமா வளர்ந்துடும் சார்!

பூவராகன்சிங்: ”மக்களே…இதோ இந்த அனல்மின் நிலையத்தைப் பாருங்க. இதுக்கும் மரியாதை இல்லை. இதோ இது தலித்துங்க இறந்தவங்களை புதைக்கிற மயானம். இங்கேயும் கரன்ட் இல்லை. தமிழ்நாட்டிலும் கரன்ட் இல்லை. டெல்லியிலும் கரன்ட் இல்லை. புறவு, இந்த மணல்ல இருந்தா மின்சாரம் தயாரிக்க முடியும்? ஒப்பந்தத்தை போடுன்னு சொல்றேன் மக்களே..” ManmohanBush

அவதார் சிங் (சோனியாவை பார்த்து): ”எம்.பி. வோட்டு உன் காதிலே தேனை வார்க்கும். தோழரின் பாட்டு உன் கண்ணிலே நீரை வார்க்கும். உடல் ஒப்பந்ததுக்கே போகட்டும். அணு பூமியை ஆளட்டும். ஓஹோ ஓஹோ சனம்… ஓஹோ ஒஹோ வோட்டு!”

ஜார்ஜ் புஷ்: ”யுரேனியத்துக்கு பதிலா என்.ஏ.சி.எல். வேணும்னா கொடுக்கிறோம். ஆனா,ஒப்பந்தத்துல கையெழுத்து போடக் கூடாதுன்னு பிரகாஷ் காரத் சொல்றார். பேசாம பிரகாஷ் காரத்துக்கும் ஒசாமாவுக்கும் தொடர்பு இருக்குறதா சி.ஐ.ஏவை வெச்சு ஒரு வதந்தி கிளப்பிருவோம். ஓ.கே. ஹூ இஸ் பிரகாஷ் காரத்?”

ஃப்ளெட்சர்சிங்: ”சிட்டம்பிரம்… போகணும்’னு நான் சொன்னப்ப மிஸ்டர் அமர்சிங் ஹாப்பியானது ஏன்னு இப்பதான் புரியுது. ஹூம்… என் பைனானஸ் மினிஸ்டருக்கே பாம் வைக்கிறார். புல் ஷிட்! வேர் இஸ் ஆட்டம் வயல்?”

ஷிங்கென் நரஹஸி சிங்: (ஜார்ஜ் புஷ்ஷிடம்) ”ஒரு அமெரிக்கனா உண்மையைச் சொல்லு…’ அணுசக்தியில இருந்து மின்சாரம் எடுக்கணும். இந்தியா நல்லா இருக்கணும்’னு இந்தியர்களை விட அதிகமா நீ கவலைப்படுறியே? நிஜமான காரணம் என்ன?”

: For Manakkudiyan.com, Posted by - Paraman Pachaimuthu


9.7.08

கடலடியில் சந்தித்தோம்

நாடுகளிடையேயான இணைய பரிமாற்றங்களில் 90 சதவீதம் பைபர் ஆப்டிக் கேபிள்கள் வழியும் 10 சதவீதம் செயற்கைகோள்கள் வழியும் நடக்கின்றன. இந்த பைபர் ஆப்டிக் கேபிள்கள் கடல்வழியாய் பூமியின் அனைத்து கண்டங்களையும் இணைக்கின்றன. அண்டார்டிக்காவைத் தவிர. (சில கடலடி கேபிள் படங்கள் கீழே)

கடல் வழி கேபிள்கள் போடுவது ஒன்றும் புதிய யுக்தி அல்ல. 1850-களிலேயே இதுமாதிரி கடலடிகேபிள்களை இங்கிலாந்தில் போட்டிருக்கின்றார்கள் .1870-ல் மும்பையும் லண்டனும் இப்படி கடலடி கேபிள்களால் இணைக்கப்பட்டிருந்தன.

இன்றைக்கு துபாயின் E-marine, சிங்கப்பூரின் Asean Cableship போன்ற நிறுவனங்கள் கப்பல்கொண்டு இந்தமாதிரி கடலடி கேபிள்களை நிறுவுகின்றன. சும்மா இல்லை, ஒரு மீட்டர் பைபர் ஆப்டிக் கேபிளின் எடை 10 கிலோ இருக்குமாம்.

இந்தியாவை உலகெங்கும் இணைக்க கீழ்கண்ட நம் நகரங்களிலிருந்து கடலடி நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள்கள் பல நாட்டு நகரங்களுக்கும் செல்கின்றன. அவை மும்பை, பூனா, சென்னை மற்றும் கொச்சின்.

நமது சென்னையிலிருந்து கீழ்கண்ட கடலடி கேபிள்கள் அக்கரைசீமைக்கு செல்கின்றது.

TIC (Tata Indicom Cable)- இந்த fiber-optic கேபிள் சிங்கப்பூருக்கு செல்கின்றது. இது முழுக்க முழுக்க Tata Communications (முன்னாள் VSNL)-க்கு சொந்தமானது. இதன் நீளம் 3175 கிமீ. இதன் வேகம் 5.12 Tbps.

SEA-ME-WE 4 (South East Asia–Middle East–Western Europe 4)- இந்த கடலடி கேபிளின் ஒரு கிளை சிங்கப்பூருக்கும் மற்றொரு கிளை கொழும்பு போய் பின் மும்பை போய் அப்படியே மேற்கத்திய நாடுகளுக்கும் செல்கின்றது.

i2i CN - இந்த கடலடி கேபிள் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு செல்கின்றது.இது Bharti Airtel -க்கு சொந்தமானது.

FALCON - இந்த கடலடி கேபிள் சென்னையிலிருந்து ஹாங்காங்குக்கு செல்கின்றது.இது Reliance Communications -க்கு சொந்தமானது.

இப்படி எனக்கு தெரிந்து நான்கு கடலடி கேபிள்கள் சென்னையை உலகோடு இணைக்கின்றது.

இன்னொரு LOCOM எனும் கடலடி கேபிளும் நமது சென்னையை மலேசியாவோடு இணைக்கின்றது என்கின்றார்கள். உறுதியாய் தெரியவில்லை.

Reliance Communications-ன் Reliance FLAG - தான் உலகின் மிக நீளமான தனியார் கடலடி கேபிள் ஆகும். இது 65,000 கிமீ நீளமானது.

அடுத்ததொரு யுத்தம் வந்தால் Star war என்று சொல்லிக்கொண்டு தகவல் தொடர்பு செயற்கை கோள்களை தகர்ப்பது போல Fiber war என்று சொல்லிக்கொண்டு தகவல் தொடர்புக்கு உதவும் இந்த கடலடி கேபிள்களையும் சில முட்டாள் மனிதர்கள் தகர்ப்பார்கள். அதுவரைக்கும் உலகம் இப்படிச் சுருங்கிக்கொண்டே தான் இருக்கும்.

இதோ நான் எங்கோ இருந்து எழுதியிருக்க நீங்கள் எங்கோ இருந்து படித்துக் கொண்டிருக்கிறீர்களே. எந்த கடலடி கேபிள் வழி சந்தித்தோமோ?






INSIDE A SUBMARINE CABLE
cable infographic
1 Polyethylene cover
2,4 Stranded steel armour wires
3,5 Tar-soaked nylon yarn
6 Polycarbonate insulator
7 Copper sheath
8 Protective core
9 Optical fibres


உலக கடலடி கேபிள்கள் மேப் pdf வடிவில்
http://www1.alcatel-lucent.com/submarine/refs/World_Map_LR.pdf

உலக கடலடி கேபிள்கள் மேப் flash வடிவில்
http://www.tatacommunications.com